Wednesday, December 4, 2013

கதையும் காரணமும்

பொதுவாக  கதைகள்  மற்றும் கற்பனைகளைப்  பற்றி  எழுதுவதில்லை என்ற விதியை எனக்கென வகுத்துக் கொண்டு பதிவு எழுத ஆரம்பித்தேன்.  ஆனால் எதிலும் ஒரு விதி விலக்கு இருக்குமல்லவா?  அதுதான் இப்பதிவு.

நேற்றைய (03.12.2013) தி இந்து தமிழ் நாளிதழில் கதை ஒன்று படித்தேன். கதையின் சாராம்சம் இதுதான் :  லட்சுமி என்பவள் அவரின் அம்மா சீதனமாக கொடுத்த பழங்காலத்து அண்டா ஒன்றை கழுவி வெளியில் வைத்து உள்ளாள். இவள் வீட்டுக்கு உள்ளே சென்ற சமயத்தில் அண்டா காணாமல் போய்விட்டது. பக்கத்து வீட்டுக்காரி மீது சந்தேகம், ஆனால் அவள் எடுக்கவில்லை என்று சத்தியம் செய்கிறாள்.  குளித்து விட்டு ஈர சேலையோடு அங்காத்தா கோயிலில் சென்று வேண்டிகொள்ளும்படி ஒருவர் யோசனை சொல்கிறார்.  ஆத்தா கோயிலில் தாயத்து மந்தரித்து அவள் வீட்டு வாசலில் போட்டு விடு, அவள் குடும்பமே அழிந்துவிடும் என்கிறார் இன்னொருவர்.  அவளிடம் கொஞ்சம் மிளகாய் வாங்கி அதை சாந்தாக அரைத்து ஆத்தா மீது பூசிவிடு,  ஆத்தா துடித்து அவளை பலி வாங்கிவிடுவாள் என்கிறார் இன்னொரு பெண்மணி. 

லட்சுமி சரியென,  ஆத்தாவிடம் முறையிட அங்காத்தா கோயிலுக்கு செல்கிறாள். கோயிலில் ஒரே கூட்டம்,  போலீஸ் வேறு இருக்கிறது. என்னவென்று விசாரித்ததில்,  ஆத்தாவின் 50 பவுன் நகைகளை இரவு யாரோ திருடிவிட்டார்களாம்.  லட்சுமி பேசாமல் திரும்பி வந்துவிட்டாள்.

கதையின் உட்கருத்து தெரிந்ததே.  ஆனால் இந்த கதை எப்படி இந்து குழுமத்திலிருந்து வரும் ஒரு பத்திரிகையில் வெளிவந்துள்ளது. மிக மிக ஆச்சரியமான ஒரு விசயம். பத்திரிகை தர்மம் என்பது,  நமக்கு உடன்பாடு இல்லாத கருத்தாக இருந்தாலும் எழுதுபவரின் உரிமையை மதித்து நாம் வெளியிட வேண்டும் என்பதாக சொல்வார்கள்.

தி இந்து ஆசிரியர் குழுவிற்கும் நிர்வாகத்திற்கும் பாராட்டுக்கள்.

**************************************************************************************

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  நான்  பார்ப்பது செய்திகள், விவாதங்கள் அடுத்து திரைப்படப் பாடல்கள்.  கதைத் தொடர்களை பெரும்பாலும் பார்ப்பதில்லை. ஆனால் இதில் ஒரு விதி விலக்கு.  விஜய் தொலைகாட்சியில் இரவு பத்து மணிக்கு ஒளி/ஒலிபரப்பாகும் OFFICE  என்ற தொடரைப் பார்ப்பதுண்டு.

காரணம், அதில் வருகிற விசுவநாதன் என்னும் பாத்திரம்.  ஒரு கணினி நிறுவனத்தின் Country Head ஆக  கதையில் வருகிறார்.  ஒரு நிறுவனத்தை எவ்வாறு நடத்துவது? வேலை செய்பவர்களின் பதவிக்கேற்ற பொறுப்புகள் மற்றும் உரிமைகள் என்னென்ன?  என மிக அழகாக விளக்குகிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் நிறுவன மேலாண்மை குறித்த வகுப்பு எடுப்பது போல் உள்ளது. மிகவும் அருமை. குழுவாக வேலை செய்வதன் நோக்கம், அதன் பலன் போன்றவற்றை தெளிவாக விளக்குகிறார். ஊழியர் தவறு செய்யும்போது அதனை விசாரிக்கும் விதம், தண்டனை எனில் அதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என விளக்குவது, என நிறைய விசயங்களை நேயர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் அன்று வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவருடன் நடைபெறும் உரையாடலை பதிவு செய்வது மரபல்ல எனவும் இன்னும் பல கருத்துக்களை அவர் மூலம் சொல்கிறார்கள். வசனம் எழுதியவர் பெரும் பாராட்டுதலுக்கு உரியவர். இத்தொடரைப் பார்த்தால், ஒரு அலுவலகத்தை செம்மையாக நிர்வாகம் செய்ய யோசனைகள் கிடைக்கலாம். 

மேலும் காதல், காதலரிடையே ஏற்படும் ஊடல், நட்பு, அதனால் வரும் விட்டு கொடுக்கும் பண்பு  என மனதின் துல்லியமான உணர்வுகளையும் வெளிக்கொணரும் வண்ணம் வசனங்களும் காட்சி அமைப்புகளும் உள்ளன. நகைச்சுவை காட்சிகளும் நன்றாக உள்ளன.

இயலுமெனில்,  பாருங்களேன்.


.

No comments:

Post a Comment