Sunday, January 22, 2017

தமிழின எழுச்சி


சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலான  வரலாற்றில் இப்படியொரு கூட்டத்தை சென்னை கண்டிருக்க வாய்ப்பில்லை.  தலைமை என்று எவரும் இல்லை எனினும், நமக்கு என்ன வேண்டும் என்ற ஒரு தெளிவான முடிவோடு  கட்டுப்பாடான ஒரு போராட்டம் இரவு பகல் என பாராது தொடர்ந்து ஒரு வாரமாக மிக கண்ணியமாக நடந்து வருகிறது.  உலகில் வேறு எங்கும் இப்படி நடந்திருக்குமா என்பதில் ஐயமே.

மெரினாவில் நேரில் கண்ட காட்சிகள் நம்மை தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்ள வைக்கின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பாங்கு, போராடும் களங்களை கையில் உறை மாற்றிக் கொண்டு சுத்தப்படுத்தும் நேர்த்தி, இரவிலும் மகளிர் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற ஒரு ஒழுங்கு.  என்னவென்று சொல்ல?  உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஒரு வண்டி நிறைய தண்ணீர் பாக்கெட்டுகளை கொண்டு வந்து வழி நெடுகிலும் கொடுத்து கொண்டே செல்கிறார்கள். இன்னொரு வண்டியில் பிஸ்கட் பாக்கெட்கள் வருகிறது. மற்றுமொரு பக்கத்தில் சாம்பார் சாதமும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலும் கொடுக்கிறார்கள். கலைவாணர் அரங்கம் அருகில் சாலையின் ஒரு புறத்தில் ஒரு பள்ளி மாணவன் வேனில் இருந்து தண்ணீர் பாக்கெட்களை கொடுத்து கொண்டு இருக்கின்றான். சாலையின் மறுபக்கத்தில் ஊனமுற்ற ஒருவர் தண்ணீருக்காக வேண்டி பார்ப்பதை கவனித்து ஒரு பாக்கெட்டை மத்தியில் உள்ள ஒருவரிடம் வீசி அண்ணா அவருக்கு கொடுங்கள் அண்ணா என்கின்றான். பள்ளி சீருடையிலேயே வந்த ஒரு சிறுமி பிஸ்கட் பாக்கெட்களை மெரினாவில் உள்ள நடைபாதையில் அமர்ந்துள்ளவர்களுக்கு கொடுத்துக் கொண்டே செல்கிறாள். ஒரு பெரியவர் வாழைப்பழ சீப்புகளை தட்டு வண்டியில் எடுத்து அனைவருக்கும் கொடுத்து வருகிறார்.   கடந்த 2015ல்  வெள்ளம் வந்த போது நிவாரண பணிகளுக்காக வந்திருந்த வட மாநில உயர் காவல் அதிகாரி,  தான் நாட்டின் பல பகுதிகளுக்கு பேரிடர் நிவாரண பணிக்காக சென்றுள்ளதாகவும் ஆனால் இங்கு சென்னையில்தான் பாதிக்கப்பட்டவர்களை விட உதவி செய்பவர்கள் அதிகம் உள்ளதை  பார்ப்பதாகவும் கூறினார். மீண்டும் தமிழனின் பண்பு உலகுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

இரு சக்கர வண்டிகள் வேகம் வேகமாகவும் செல்கின்றன, சில சமயங்களில் உரசல்களும் நடக்கின்றது. ஆனால் எங்கும் சண்டை இல்லை. அனுசரித்து செல்கிறார்கள். நமது நோக்கம் வேறு, இந்த வீண் சண்டை இல்லை என்பது அவர்களின் மனதில் இயல்பாக அமைகிறது.

உலகின் மிகப் பழமையான கலாச்சாரங்களில் தமிழுக்கு பிரதான இடம் உண்டு.  இப்போது சுமார் 70 ஆண்டுகளாகத்தான் நாம் இந்தியன் என அடையாளம் காணப்படுகிறோம். ஆனால் 7000 ஆண்டுகளாக தமிழன் மிகச் சிறப்பாக இருந்து வந்துள்ளான்.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என மொழி இலக்கணம் கண்டவர்கள் நாம். இதில் பொருள் என்பது வேறு எந்த மொழியிலும் இல்லை. ஐவகை நிலங்கள், அதற்கான காரணிகள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என சங்க இலக்கியங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். மொழிக்கு சிறப்பான ஒரு  இலக்கணம் அமைத்துக் கொடுத்த தொல்காப்பியர், உலகமே வியக்கும் வண்ணம் திருக்குறளை படைத்த வள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், அவ்வையார், பாரதி என தமிழுக்கு வளம் சேர்த்தோர் பலர்.

தமிழ் மன்னர்களின் சிறப்பும் போற்றுதலுக்கு உரியது. கிராம சபை அமைத்து பஞ்சாயத்து முறை கொண்டு வந்தது, பாசன வசதிக்கென கட்டிய அணைகள், வெட்டிய கால்வாய்கள், ஆன்மீக பணியாக கட்டிய கோயில்கள், இமயம் வரை வென்ற வீரத்தின் அடையாளம், கடல் கடந்தும் போரிட்ட தீரம், திரைகடலோடி செய்த வாணிகம் என தமிழனின் சிறப்புகள் சொல்லி மாளாது.

ஆனால், இந்திய அரசில் தமிழன் வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளான்.

வெள்ளையனை எதிர்த்து தோற்று போன ஜான்சி ராணியை பற்றி படித்த நாம், வெற்றி கொண்ட நமது வேலு நாச்சியாரைப் பற்றி அதிகம் படிக்கவில்லை.  

வட நாட்டில் இருந்து மீரா என்பவர் பஜன் பாடல்களைப் பாடி கண்ணனை வணங்கி அவரை மண முடிக்க வேண்டினார். ஆனால் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என போற்றப்பட்டு திருப்பாவை பாடி ஆண்டவனையே மணந்து கொண்டாள். வருடம் தோறும்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் திருமண உற்சவத்திற்கு திருப்பதி திருமலை ஆலயத்திலிருந்து மாலை வருகிறது.

வட நாட்டவர் மீரட் புரட்சியே ஆங்கிலேயரை எதிர்த்த முதல் போர் என்பர். ஆனால் அதற்கு முன்னரே இங்கு வேலூரில் புரட்சி நடந்த வரலாறு உண்டு.

பழமையானதும் மொழி வளம் கொண்டதுமான தமிழை விட இந்தியே உயர்ந்தது என்கின்றனர்.  இலங்கை, சிங்கப்பூரில் தமிழ் ஒரு ஆட்சிமொழி. சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கினால் உங்களை தமிழ் வரவேற்கும். லண்டன் பி.பி.சி. வானொலி நிலையத்தில் தமிழ் ஒலி பரப்பு எப்போதோ துவக்கப்பட்டது. பி.பி.சி. யின் இந்திய மொழி ஒலிபரப்பில் தமிழே முதலாவது ஆகும். தற்போது தெலுங்கு, மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி ஆகிய மொழிகளில் 2017ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாக தகவல்.

காந்தி, நேரு என்ற பெயரில் இங்கு தெருக்கள், நகர்கள் எத்தனை உள்ளன. ஆனால் வட நாட்டில் வள்ளுவன், கம்பன், பாரதி பெயரில் ஒன்றும் இல்லையே. ஏன்? ரூபாய் நோட்டில் எங்கள் வள்ளுவன் படம் இருக்க கூடாதா? கடந்த வருடம் உத்ரகாண்டில் வள்ளுவன் சிலை வைக்க எவ்வளவு சிரமம்?

இப்பொழுதும் கூட தமிழர் அறிவு சால் உலகமாகத்தான் உள்ளது. எத்தனை பணம் கொடுத்தாலும் வெளிநாட்டிற்கு செல்லமாட்டேன் என்று சொல்லி இந்திய அரசில் பணி புரிந்து அணு சோதனை, புதிய ஏவுகணைகள் என கண்ட அய்யா அப்துல்கலாம், செவ்வாய் கிரக விண்வெளி திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் பெரிய தொழில் குழுமமான டாட்டா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், பெப்சி கோ நிறுவனத்தின் தலைவி இந்திரா நூயி, கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை, நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என பலர். மிகச் சிறந்த படித்தவர்கள் தமிழ் நாட்டில் உள்ளனர் என பல நிறுவனங்கள் இங்கு அலுவலகம் அமைக்கின்றனர்.   

காவிரி நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் 1974ல் முடிந்து அதனை புதிப்பிக்க எத்தனை கஷ்டப்பட வேண்டியுள்ளது. பல ஆண்டுகள் பேசியும் பலனில்லாமல் நடுவர் மன்றம் அமைக்க ஒரு கஷ்டம். 1990ல் அமைந்த நடுவர் மன்றமும் பல ஆண்டுகளாக விசாரித்து இடைக்கால தீர்ப்பு ஒன்று வழங்கி பின்னர் 2007ல் இறுதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு அதற்கு அங்கீகாரம் வேண்டி நீதிமன்ற படியேறி கடைசியில் நிறைவேறியது.  ஆனால் நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பின்படி நீர் பங்கீட்டை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இன்னும் அது மத்திய அரசால் செய்யப்படவில்லை. இதே உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும்  எத்தனை கெடு விதித்த போதும் மத்திய அரசு சாக்கு போக்கு சொல்லி தட்டி கழித்து விட்டது.  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால் காவிரியில் உள்ள அணைகள் அவற்றின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும். அணைகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வசம் இருக்கும்.  எந்த மாதத்தில் எவ்வளவு நீர் யாருக்கு என நடுவர் மன்ற தீர்ப்புபடி பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கும். கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் அணை இருப்பதால் தீர்ப்பு கிடைத்தும் பயன் இல்லை. நீரின்றி வாடிய பயிரை கண்டு விவசாயி நெஞ்சடைத்து இறந்துதான் மிச்சம்.

யார் இந்த PETA.  பன்னாட்டு நிறுவனங்களின் வணிக லாபத்திற்காக வளரும் நாடுகளில் அதற்கான செயல்களை செய்வதுதான் இதன் நோக்கம்.  ஒரு வியாபார நிறுவனம் 10 ரூபாய் செலவு செய்யவே லாபம் என்ன வரும் என்று கணக்கு பார்க்கும் இந்த காலத்தில் கோடிகணக்கான ரூபாயை ஒரு N.G.O க்கு எதற்காக கொடுக்க வேண்டும்?  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் வாதிக்கும் வழக்குரைஞர்களுக்கு பெருந்தொகையை கட்டணமாக கொடுக்கவும் PETAவிற்க்கு பணம் கிடைப்பது பின் எப்படி? நமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்றா இவர்கள் செலவு செய்கிறார்கள்? இல்லை.

முன்பு ஒரிசாவில் நிகழ்ந்த விவரம். உள்ளூர் பசுக்களையும் காளைகளையும் வைத்து விவசாயம் பார்த்து பால் கறந்து கொடுத்து அமைதியாக இருந்த கிராமங்களில் ஜெர்சி பசு கொடுத்து அவற்றின் தீவனம் வளர்க்க நிலம் கொடுத்து மாடு பராமரிக்க பணமும் கொடுத்து ஒரு திட்டத்தை ஆரம்பித்தனர். இத்தனை இலவசத்தை பார்த்து மயங்கிய கூட்டம் அதனை விருப்பத்துடன் செய்தது. ஆனால் ஒரு நிபந்தனை இந்த பசுக்களின் கருத்தரிப்புக்கு உள்ளூர் காளைகளை பயன்படுத்தக் கூடாது. அவர்கள் கொடுக்கும் விந்தணு ஊசிகளைத்தான் பயன்படுத்த வேண்டும். இதனால் பிறக்கும் கன்றுகள் பலம் இன்றி நோஞ்சானாக இருந்தன. அவர்களுக்கு பால் தான் தேவை. கன்றை பற்றி கவலை இல்லை. எனவே புதியதாக காளைகளே அங்கு இல்லை. மேலும் உள்ளூர் காளைகள் காயடிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. இப்பொழுது ஒரு காளை இனமே அங்கு இல்லை. பால் கறவை தொழில் உண்டு. அது வசதி படைத்தோர் மற்றும் பெரிய கம்பெனிகள் மட்டுமே செய்ய முடியும். ஏனென்றால் சில வருடம் கழித்து கிராம மக்களிடம் கொடுத்த மாடும் தீவனத்திற்காக கொடுத்த நிலமும் திட்டம் முடிந்து விட்டது என்று சொல்லி திரும்ப வாங்கப்பட்டு விட்டது. ஜெர்சி மாடு வாங்க வேண்டும். அதற்கு தீவனம், விந்தணு ஊசி அனைத்தும் அவர்களிடமே வாங்க வேண்டும். பாலை நாம் விற்றுக் கொள்ளலாம். முடியாவிட்டால் பாலையும் அவர்கள் கேட்கும் விலைக்கு அவர்களிடமே கொடுக்க வேண்டும். என்ன செய்வது?   இப்பொழுது அவர்கள் தொழில் ஏதுமின்றி அடுத்த மாநிலத்திற்கு கட்டிட வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது.  இந்த ஜெர்சி பாலில் உள்ள ஒரு வகை கொழுப்புதான் சர்க்கரை நோய் வர காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்த பன்னாட்டு நிறுவனங்கள் சர்க்கரை நோயையும் கொடுத்து அதற்கு மருந்தையும் அவர்களே கொடுக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு மிகவும் தொன்மையானது என்பதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. கோசலை நாட்டு இளவரசி நப்பினை என்னும் மங்கையை மணப்பதற்காக ஸ்ரீகிருஷ்ணர் ஏழு காளைகளை அடக்கியதாக சொல்லப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வார் அவர் எழுதிய பாசுரங்களில் இதனை குறிப்பிட்டுள்ளார். இன்றும் நமது பெருமாள் கோயில்களில் பாடப்படும் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களில் ஜல்லிக்கட்டு பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். (ஜல்லிக்கட்டை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்துள்ள மனுவிலும் இதனை சொல்லியுள்ளார்) மேலும் கலித்தொகையில் முல்லை நிலம் குறித்த பாடல்களில் காளையை அடக்கும்  ஏறு தழுவுதல் நிகழ்ந்ததாக பாடப்பட்டு உள்ளது. இந்த இலக்கியங்கள் எவையும் அழிந்துவிடவில்லை. இன்றும் நூலகங்களில் படிக்கலாம். அய்யா மோடி அவர்கள் இவற்றை படித்து அவர் வணங்கும் ஸ்ரீகிருஷ்ணரே காளையை அடக்கியதை கண்டு இதன் தொன்மையையும் பாரம்பரியத்தையும் புரிந்து கொள்ளலாம்.

இன்றும் காளைகளும் பசுக்களும் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே பார்க்கப்படுகின்றன. பெயர் வைத்து அழைப்பதும் உண்டு. வீட்டின் பெண்களும் குழந்தைகளும் அவற்றுடன் ஒன்றி வாழ்ந்து வருவர். தென் மாவட்ட ஊர் ஒன்றில் இறந்து போன மாட்டிற்கு சமாதி கட்டி அதன் மேல் சிலை அமைத்து தினமும் வெளியில் செல்லும்பொழுது வணங்கி விட்டு செல்லும் காட்சியும் உண்டே. மாடு பிடிக்கும் வீரர்களும் ஜல்லிகட்டுக்கு 15 நாட்கள் முன்னாலிருந்து புலால் உண்ணாமல் மது அருந்தாமல் விரதம் இருப்பவர்களும் உண்டு.  அப்படியில்லையென்றால் தெய்வ குத்தமாகிவிடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. மாடு முட்டி மாடு பிடிக்கும் வீரனுக்கு ரத்த காயம் வரலாம், ஆனால் மாட்டின் மேல் ஒரு துளி ரத்த காயம் கூட இருக்க கூடாது என்ற மரபில் ஜல்லிக்கட்டு நடத்தும் மாண்பும் உள்ளதென சொல்லப்படுகிறது.

இப்படி பாரம்பரியமும் தொன்மையும் கொண்ட ஒரு வீர விளையாட்டை கடந்த மூன்று வருடங்களாக இந்த அரசியல் கட்சிகள் நடத்த முயற்சி எடுக்காமல் மக்களின் உணர்வோடு விளையாடி விட்டார்கள். இப்போது எழுந்துள்ள இந்த தமிழ் எழுச்சி,  உலகில் ஏற்பட்ட பல புரட்சிகளோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையில் சிறப்புகளை கொண்டது. வட இந்திய ஊடகங்களும் அறிஞர்களும் தமிழகம் இந்தியாவின் முன்மாதிரி என சொல்ல வைத்த எழுச்சி.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நமது மாணவ செல்வங்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் அத்துணை விசயங்களும் தெரிந்து வைத்துள்ளனர். 1960ம் ஆண்டின் மிருக வதை தடை சட்டத்தில் எந்த பிரிவுகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை மிக தெளிவாக சொல்கின்றனர். என்ன வேண்டும் என்பதில் அனைவரும் ஒரே கருத்தாக உள்ளனர்.   

பதவி மற்றும் பணத்திற்காக எவர் காலிலும் விழ தயராக இருக்கும் அரசியல்வாதிகளையும் பணம், புகழ் என்றே குறிக்கோளாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களையும் அண்ட விடாமல், போராட்டத்தை தானே வழி நடத்திய விதம் எப்போதும் கண்டிராதது.  

தன் இனத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை காக்க ஒரே சமயத்தில் ஒரே குறிக்கோளுடன் கண்ணியமாக அஹிம்சை முறையில் உலகின் அத்துணை பாகங்களிலும் வெகுண்டு எழுந்து குரல் கொடுத்த என் தமிழ் இனமே, உலகின் முதல் தோன்றிய மூத்த குடி.  தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்வது வெறும் வாக்கியமல்ல. அது சத்திய வாக்கு.

பணம் பணம் என்றே ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகில், நியாயங்களுக்கு குரல் குடுக்கக் யாரும் இல்லையா? என்று ஏங்கிய பொழுது,  

தமிழ் என்றால் இளப்பமாக நினைக்கும் இந்த கூட்டங்கள் மற்றும் பல ஊடகங்களுக்கு மத்தியில் தட்டி கேட்க யாரும் இல்லையா? என்று விசனப்பட்ட சமயத்தில்

அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கையற்று இருந்த வேளையில்

எமது தமிழ் இன மாணவ செல்வங்களும் இளைஞர்களும் நம் இனத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் காக்க தன் எழுச்சியாக கிளர்ந்து எழுந்து அரசியல் புரட்சியை ஏற்படுத்தியது கண்டு  மிகப்பெருமிதம் கொள்ளும்போது விழியோரம் நீர் துளிர்ப்பதையும் தவிர்க்கமுடியவில்லை.  

தமிழ் வாழ்க

அன்புடன்
பெருமாள்.