Saturday, February 22, 2014

ராஜீவ் காந்தி கொலையும் கைதிகள் விடுதலையும்

இப்போது மக்களிடையே விவாதத்தில் உள்ள முக்கியமான ஒரு விசயம். என்னுடைய கருத்து இவர்களை விடுதலை செய்யலாம் என்பதே. காரணங்களை விவரித்துள்ளேன்.  வாசித்து பார்க்கவும்.

1.       ராஜீவ் காந்தியின் கொலை இந்தியாவிற்கு எதிரான ஒரு தீவிரவாத செயல் என கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் 08.10.1999 அன்று தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.  ஒருவர் (ராஜீவ் காந்தி) எடுத்துள்ள முடிவினால் பாதிக்கப்பட்ட இன்னொருவர்  (பிரபாகரன்) செய்த செயல். இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவோ இந்திய மக்களுக்கு எதிராகவோ விடுதலை புலிகள்  போரிடவில்லை. ராஜீவ் காந்தியை தவிர மற்ற இந்தியர் யாரையும் கொல்லும் நோக்கம் அவர்களுக்கு இருந்ததாக நிருபீக்க ஆதாரங்கள் இல்லை. எனவே இந்தக் குற்றம் தடா சட்டத்தின் கீழ் வராது என உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. எனவே வட இந்திய தொலைக்காட்சிகள் கூச்சலிடுவது போல் இதை ஒரு பயங்கரவாத செயல், தீவிரவாதிகள் என்றெல்லாம்  எடுத்துக் கொள்வது தவறு.

2.       இந்தக் கொலையில் நேரடியாக சம்பந்தபட்டதாக கூறப்படும் பிரபாகரன், பொட்டு அம்மன், சிவராசன், தனு போன்றவர்கள் இப்போது உயிருடன் இல்லை. இந்த கைதிகள் துணையாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.  அதுவம் பேரறிவாளன் குற்றம் என்னவென்றால், பேட்டரி செல் வாங்கி கொடுத்ததாம். இந்த செல் இதற்குதான் வாங்கினாரா? போன்ற பல வினாக்களுக்கு பதில் இல்லை. இதற்காக 20  வயதில் சிறைக்கு சென்றவர்க்கு இன்று வயது 43 ஆகிறது.


3.       மிகக் கொடுமையான தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடை பெற்றது. வெளி உலகிற்கு தெரியாமல், மூடிய அறைக்குள் நடந்த இந்த விசாரணையில் நியாயமான உரிமைகளுக்கு இடம் இல்லை. நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் 60 நாட்கள் வரை சிறையில் வைக்கலாம். போலிஸ் விசாரணையில் வாங்கப்பட்ட வாக்குமூலத்தை கோர்ட் ஏற்றுக் கொள்ளும். யார் யார் சாட்சிகள், அவர்களின் சாட்சியங்கள் என்ன? என்பதெல்லாம் வெளியில் தெரியாது. அப்பொழுது கைது செய்யப்பட்ட ஆதிரை என்பவருக்கு வயது 17தான். பெரிய சட்ட வல்லுனர்களே அதிர்ச்சி அடையும் வண்ணம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை அளித்தது தடா நீதிமன்றம். இது நியாயமாக நடந்த விசாரணை அல்ல என பல மனித உரிமை அமைப்புகள் கூறின.  நல்லவேளை இப்போது தடா என்னும் சட்டம் இல்லை.

4.       ராஜீவ் காந்தி கொலை மற்றும் அதன் பின்னணிகளை பற்றி விசாரிக்க நீதிபதிகள் வர்மா கமிசனும் மற்றும் ஜெயின் கமிசனும் அமைக்கப்பட்டன. இவர்கள் பல விவரங்களை கண்டுபிடித்துக் கூறினார்கள். ராஜிவ் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடுகள் இல்லை. ஆனால் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் அதில் மாற்றங்களை செய்து தொந்தரவு செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியின் பயண விவரம் சிவராசனுக்கு தெரிந்தது எப்படி என்பதற்கு இன்று வரை பதில் இல்லை. சந்திராசாமி என்பவரைப் பற்றியும் குற்றம் சொல்லப்பட்டது. நீதிபதிகள் கொடுத்த அறிக்கைகளின்படி எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சி.பி.ஐயில் பணி புரிந்த ரகோத்தமன் என்பவர் இந்த கொலையில் இன்னும் சிலர் சம்பந்தபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

5.       இவர்கள் இந்த கொலையின் மூலம் நேரடியாக எந்த பலனையும் பெற்றதாக தெரியவில்லை. ஆதாயதிற்க்கான கொலை என்று சொல்ல முடியாது. கொலைக்கான திட்டங்கள் 1987லிருந்து
தொடங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிகிறது. இதற்கு மூலமாக இருந்தவர்கள், உதவியவர்கள் என பலர் இன்னும் வெளியில் தெரியவில்லை அல்லது மறைக்கபடுகிறார்கள்.

சி.பி.ஐ. விசாரணை, வர்மா மற்றும் ஜெயின் கமிசனின் அறிக்கைகள், தடா கோர்ட்டின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் போன்ற அனைத்தையும் பார்க்கும்பொழுது 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ள இவர்களை விடுதலை செய்யலாம் எனத் தோன்றுகிறது.  பிரதமரை கொன்றவர்களுக்கே விடுதலையா என உணர்ச்சி வசப்பட்டு பேசாமல் இதில் உள்ள அனைத்து உண்மைகளையும் இவர்களது பங்கினையும் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நீதி தேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டு இருக்கும். ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒரு வழக்கில் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல், வேண்டியவர் வேண்டாதவர் என பாராமல் வழக்கின் உண்மை தன்மையைக் கொண்டு விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அதைத்தான் உச்ச நீதிமன்றமும் இப்போது செய்துள்ளது.


மாற்று கருத்துக்கள் இருப்பின் வரவேற்கப்படுகிறது.

Wednesday, February 12, 2014

லோக்சபாவும் ராஜ்யசபாவும்


கடந்த 27.08.2010 அன்று நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சம்பளத்தை ரூபாய்16000 லிருந்து   50000 ஆகவும், தொகுதி பணிக்கென 20000லிருந்து  45000 எனவும்,  அலுவலக செலவுக்கென 20000 லிருந்து 45000 எனவும் ஆக மொத்தம் மாத சம்பளத்தை ரூ. 56000 லிருந்து ரூ.140000 ஆக உயர்த்திக் கொண்டார்கள். மற்ற சலுகைகளும் ஏராளம்.  இலவச தொலைபேசிகள், மின்சாரம், தண்ணீர், குடியிருக்க  பங்களா, இலவச விமான மற்றும் ரயில் பயணங்கள் (மனைவிக்கும் சேர்த்து),  வாகனம் வாங்க வட்டியில்லா கடன் இன்னும் பிற.

இதைத் தவிர பார்லிமென்ட் கூட்டம் நடைபெறும் பொழுது அதில் கலந்து கொள்ள தினசரி ரூ.1000 என இருந்ததை ரூ. 2000 என உயர்த்திக் கொண்டார்கள். இதற்கு உள்ளே சென்று அவையில் பேச வேண்டும் என்றில்லை.  வெளியில் உள்ள ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்டாலே போதும்.  சம்பளம், படிகள் மற்ற சலுகைகள் எல்லாம் சேர்த்து ஒரு எம்.பி பெறும் வருட ஊதியம் சுமார் 40லட்சங்களைத் தாண்டும். இதற்கு எந்த பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படிக்க வேண்டும் என்ற அவசியமேயில்லை. 5 வருட காலத்திற்கும் இந்த 534 எம்.பி.களுக்கும் ஆகும் மொத்த செலவு ஆயிரம் கோடிகளுக்கும் அதிகம் ஆகும். 

இப்படி இவர்கள் சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்திக் கொண்ட சமயத்தில்தான் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஊழல் என்று செய்தி வந்தது. டீசல், பெட்ரோல் விலைகள் உயர்த்தப்பட்டன. சிலர், இந்த நேரத்தில் இந்த சம்பள உயர்வைப் பற்றி பேச வேண்டாம் என சொல்லியதாகவும் தகவல் உண்டு.. அதே சமயத்தில் லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த உயர்வு போதாது, 16000லிருந்து  50000அல்ல, 80001ஆக உயர்த்த வேண்டும் என்று பேசியதாக  செய்திகள் சொல்கின்றன. (80000 என்பது  IAS முடித்த ஒரு மத்திய அரசு செயலாளர் வாங்கும் மாத ஊதியம், அதை விட ஒரு ரூபாய் தாங்கள் அதிகம் வாங்க வேண்டும் என்பது இவர்களின் ஆசை)

சரி, இவ்வளவும் எதற்காக?  நமது இந்திய மக்களின் வாழ்வை மேம்படுத்த, இந்திய நாட்டை வளமாக்க நல்ல பல திட்டங்களும் சட்டங்களும் கொண்டு வந்து அதனை ஆரோக்கியமான முறையில் விவாதித்து திருத்தங்கள் தேவைப்படின் அவற்றை செய்து செம்மையான ஒரு ஆட்சி முறை நடக்க இவர்கள் உழைப்பார்கள் என்பதற்குதான், சுமாராக பத்து லட்சம் மக்களுக்கு ஒருவர்  என்ற வகையில் இவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்துள்ளோம்.

1952ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நடைபெற்ற பார்லிமென்ட் கூட்டங்களில் இப்போதைய லோக்சபா மற்றும் ராஜ்யசபா போல் மோசமாக எப்போதும் இருந்ததில்லை என சொல்லப்படுகிறது. எந்தவொரு பிரச்சனைக்கும் கூடி கலந்து பேசி, விவாதித்து முடிவு காண்போம் என்றில்லாமல் கூச்சலிடுவதும் பேப்பர்களை கிழிப்பதும் மற்றவரை பேச விடாமல் தடுத்து அவையை முடக்குவதும் எந்த விதத்தில் நியாயம்?
ஒரு விசயத்தின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்காமல், நடு அவைக்கு வந்து வெறும் கூச்சலிடுவதால் எந்த தீர்வும் கிடைக்காது.  மற்றும்  இவர்களை நல்லவர்கள், அறிவாளிகள் என நம்பி அனுப்பி வைத்த மக்களை கேவலப்படுத்துவதாகவும்  உள்ளது.

இதற்கு என்னதான் தீர்வு?

  1. நாட்டில் எல்லா அரசு வேலைகளுக்கும் ஊதியத்தை நிர்ணயம் செய்ய ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஊழியர், ஆசிரியர், வங்கி பணியாளர் போன்றவர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்வதுபோல் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் சம்பளம் நிர்ணயித்தல் வேண்டும். தங்களுக்கு தாங்களே ஊதியத்தை நிர்ணயிப்பது நியாயம் அல்ல.
  2. மீண்டும் மீண்டும் தேவையில்லாத குழப்பம் விளைவிக்கும் எம்.பி.க்களை தகுந்த விசாரணை செய்து அதன் அடிப்படையில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பதவி நீக்கம் செய்யலாம்.
கருத்துக்களை மறுமொழியில் தெரியப்படுத்தவும்.