Sunday, December 15, 2013

மற்றவரின் கருத்துக்கள் நம்மை பாதிப்பதா?

வாழ்க்கையில் நாம் தினமும் வித விதமான மனிதர்களையும் அவர்களின் பேச்சு மற்றும் செயல்களையும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இவர்களில் சிலரின் பேச்சுக்கள் அடுத்தவரின் மனநிலையை புண்படுத்துமாறு அமைந்து விடுகிறது. உதாரணத்திற்கு  சில:

சாலையில் நடந்து செல்லும்பொழுது எதிரில் தெரிந்தவர் ஒருவர் பார்த்து, என்னப்பா, ஆள் இளைத்து போய்விட்டாய், உடனே டாக்டரைப் பார்.  பெரிய பெரிய வியாதிகளுக்கு எல்லாம் இதுதான் ஆரம்பம் என்று பெரிய அறிவாளி போல் சொல்லிவிட்டு போய்விடுவார். கேட்டவர் மனம் கலங்க ஆரம்பித்து விடும்.

ஒரு குழந்தை பிறந்ததின் புண்ணியதான விழாவாக இருக்கும். அதில் ஒரு பெண்மணி,  என்ன, இரண்டாவதும் பெண் குழந்தையே பிறந்துள்ளது என்று சொல்லிவிட்டு, இருக்கட்டும், இந்த காலத்தில் பெண்கள்தான் பிற்காலத்தில் காப்பாற்றுவார்கள் என்றும் சொல்லிவைப்பார். அந்த தாயின் மனம் எவ்வளவு பாடுபடும்?

திருமண விழாவில் முன்வரிசையில் ஒருவர்,  என்ன கொஞ்சம் பொறுமையாக பார்த்திருந்தால், இன்னும் கொஞ்சம் நிறமான பொண்ணாக இருந்திருக்கலாம்.  எல்லாம் பணம் செய்யும் வேலை, என்ன செய்வது? என்று பேசி வைப்பார்.  

இப்படி பல சமயங்களில் சிலரின் பேச்சு இப்படித்தான் உள்ளது. தேவையில்லாத விசயத்தை பேசி பிரச்னைகள் வருவதும் உண்டு. நாம் ஒரு விசயத்தைப் பற்றி பேசும் பொழுது எதிரே இருப்பவரின் இடத்தில் நாம் இருந்தால் எப்படி என்ற கோணத்தில் யோசித்துப் பேசவேண்டும். வாய்மை என்பது  எவருக்கும் தீங்கு இல்லாமல் பேசுவதே என்று திருவள்ளுவர் சொல்லியுள்ளார். 

சரி, இப்படி வரும் பேச்சுக்களை நாம் எப்படி எதிர்கொள்வது? கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதுதான் சிறந்த வழி. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. NOBODY CAN MAKE YOU FEEL INFERIOR WITHOUT YOUR CONSENT “  என்பதே. அதாவது, நீங்கள் அனுமதிக்காத வரையில், யாராலும் நீங்களே உங்களை குறைவாக நினைத்துக் கொள்ளும்படி செய்ய முடியாது.    

மற்றவர்கள் உங்களைப் பற்றி கூறும் தப்பான கருத்துகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதன் பொருள். ஒரு அலுவலகத்தில் உங்களைத் தெரியாத ஒரு குமாஸ்தா உங்களை சரியாக நடத்தாமல் பேசியிருப்பார்.  பேருந்தில் நடத்துனர் உங்களை திட்டி இருக்கலாம். இவற்றையெல்லாம் மனதில் வைத்து கவலைப்படுவது வீண் வேலை. உங்களைப் பேசியப் பிறகு அவர்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். உங்களை மறந்தே இருக்கலாம். இப்படித்தான் போகிற போக்கில் சிலர் சொல்லிவிட்டு போவதும்.  நமது மனம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. அதில் இப்படி  கவலைகளையும் பயத்தையும் வைப்பது மனதின் செயல்பாட்டை வெகுவாக குறைப்பதோடு உங்கள் உண்மையான திறமையும் வெளிப்படாது.

வாழ்க்கையில் சரி என்பதற்கும் தப்பு என்பதற்கும் அளவுகோல் எதுவும் இல்லை. ஒருவருக்கு சரி எனப்படுவது இன்னொருவருக்கு தப்பாக இருக்கலாம். ஒரு நாட்டில் நல்லது என்பது இன்னொரு நாட்டில் கெட்டதாக இருக்கலாம். ஒரு ஆங்கிலேய பெண்மணி நமது நாட்டிற்க்கு சுற்றுலாவில் வந்தார். நமது சுற்றுலா அமைச்சகத்தின் ஏற்பாட்டில் சென்னையில் ஒரு வீட்டில் சில நாட்கள் தங்கினார். அந்த சமயத்தில் அந்த வீட்டு பெண்ணிற்கு திருமணம் நடக்க இருந்தது. அந்த பெண்ணிடம், மாப்பிள்ளையைப் பற்றிக் கேட்டார். அந்த வீட்டு பெண், எனது பெற்றோர் பார்த்து சொன்னார்கள், நான் இன்னும் மாப்பிளையிடம் சரியாக பேசவில்லை என்று சொல்லியுள்ளார். அதற்கு அந்த ஆங்கிலேயப் பெண்மணி, என்னது, முன்பின் தெரியாத ஒருவரை திருமணம் செய்யப் போகிறாயா? என ஆச்சரியப்பட்டு கேட்டாராம். காதலிப்பது சரியல்ல இங்கு, ஆனால் காதலிக்காமல் கல்யாணம் செய்வது சரியல்ல அங்கு.

எனவே, சரி என்றும் தப்பு என்றும் எதுவும் இல்லை. ஒவ்வொன்றும் ஒரு அனுபவம்.  அந்த அனுபவத்தில் இருந்து நமக்கு ஏற்படும் விளைவுகளைக் கொண்டு பாடங்கள் பெற்று அதன் அடிப்படையில் அடுத்த அடியை எடுத்து வைப்போம்.

எவரோ ஏதோ சொல்கிறார் என்பதற்காக கவலை வேண்டாம். தெளிவாக இருங்கள். தைரியமாக செயல்படுங்கள்.

பின்குறிப்பு : 14.12.2013 தி இந்து தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையை வாசித்ததின் விளைவாக எழுதிய பதிவு இது. 

Robin Sharma எழுதியுள்ள  The Monk who sold his ferrari என்ற நூலிலும் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள எண்ணங்கள் என்ற நூலிலும் இக்கருத்தைப் பற்றி மேலும் விரிவாக சொல்லப்பட்டு உள்ளது.



Monday, December 9, 2013

நான்கு மாநில மற்றும் ஏற்காடு தொகுதி சட்டமன்ற தேர்தல்

டெல்லி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இந்த முடிவுகளைப் பற்றிய ஒரு அலசல்.

டெல்லி, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியும், மத்திய பிரதேசம் மற்றும் சத்திஸ்கரில் பி.ஜே.பி. ஆட்சியும் நடந்து வந்தன.  இதில் டெல்லியை தவிர மற்ற மூன்று மாநிலங்களிலும் தனியாக ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு பி.ஜே.பி. பெரும் வெற்றி பெற்றுள்ளது.  டெல்லியில் தனி பெரும் கட்சியாக வெற்றி அடைந்துள்ளது,  எனினும் ஆட்சி அமைக்க இன்னும் நான்கு உறுப்பினர்கள் தேவை.  இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க ஒரு விசயம்,  அர்விந்த் கேஜ்ரிவால் என்பவரால் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி என்ற  புதிய கட்சி டெல்லியில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 28ல் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக வந்துள்ளது. இவர் ஊழலுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டி உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே உடன் இணைந்து இருந்தவர்.

இந்த தேர்தல் முடிவுகளால் தெரிய வருபவை :

காங்கிரசிற்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. மக்கள் ஒரு நல்ல மாற்று வேண்டுமென விரும்புகிறார்கள்
.
மோடியின் அலை இருப்பதாக சொல்ல இயலவில்லை. ராஜஸ்தானில் வெற்றி பெற்றது இயல்பே என்கிறார்கள். நமது பக்கமுள்ள கேரளவைப்போல் ஆளும் கட்சியை ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றுவது கடந்த சில தேர்தல்களில்  அங்கு தொடர்ந்து வருகிறது. இப்போதும் அது நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் சவுகான் அவர்களின் ஆட்சி சிறப்பானது என மோடியை முன்னிறுத்தும் பொழுதெல்லாம் பேசப்பட்டு வந்துள்ளது. மூன்றாவது முறையாக அவர் முதல்வர் ஆவது அவரது ஆட்சியின் பலனாகும். சட்டிஸ்கரில் முடிவு பி.ஜே.பி. எனினும் காங்கிரஸ் இங்கு நல்ல போட்டியை கொடுத்துள்ளது. ஓட்டு எண்ணிக்கையின் இடையில் காங்கிரஸ் பெரும்பாலான சமயங்களில் முன்னிலையில் இருந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் ?

கடந்த சில தேர்தல்களில் மக்கள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை அளிக்கவில்லை.  கூட்டணி ஆட்சியே நடந்து வருகிறது.  சுதந்திரத்திற்கு முன்பே இருந்த  கட்சி என்பதால் காங்கிரஸ் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது.  அந்த கட்சியாலேயே பெரும்பான்மை பெற இயலவில்லை. அடுத்த பெரிய கட்சியான பி.ஜே.பி க்கு  இந்தியாவின் கிழக்கு, வட கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் போதுமான பலம் இல்லை. எனவே இந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கும் என்று தோன்றவில்லை. காங்கிரஸ்க்கு உள்ள எதிர்ப்பு உணர்வை மோடியின் அலையாக மாற்ற பி.ஜே.பி. அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பது உறுதி. அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகள் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கடந்த பல வருடங்களாக தமிழ் நாட்டில் நடைபெறும் சட்டமன்ற இடைதேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றி பெற்று வருகிறது. எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று செயல்பட்டு அதனை இரண்டு ஆளும் கட்சிகளும் (தி.மு.க, அ.தி.மு.க)  செய்தும் காட்டி வருகின்றன. இந்த இடைதேர்தல் வெற்றி அல்லது தோல்வியினால் ஆட்சி மாறப்போவது இல்லை. 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யட்டும் என ஒரு கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். இடையில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ. இறந்து விட்டால், அந்த எம்.எல்.ஏ எந்த கட்சியோ அந்த கட்சியே ஒருவரை அந்த இடத்திற்கு நியமித்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டால் என்ன?. இதனால் எவ்வளவு பணம், நேரம், அரசுக்கும், கட்சிகளுக்கும் மிச்சம் என்பது உங்களுக்கு தெரியும். இன்னொரு முக்கியமான விசயம், இந்த ஏற்காடு தேர்தலில் தி.மு.க வின் நிர்வாகி ஒருவர் கலவரத்தில் மரணம் அடைந்து விட்டார்.  ஓட்டுக்கு கொடுத்த பணத்தை கணவன் வீண் செலவு செய்துவிட்டதாக சண்டையிட்டு ஒரு பெண் தனது சிறுவயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது. இதனை எல்லாம் தவிர்க்க  மேற்சொன்னபடி அறிவித்து விடலாமே.


Wednesday, December 4, 2013

கதையும் காரணமும்

பொதுவாக  கதைகள்  மற்றும் கற்பனைகளைப்  பற்றி  எழுதுவதில்லை என்ற விதியை எனக்கென வகுத்துக் கொண்டு பதிவு எழுத ஆரம்பித்தேன்.  ஆனால் எதிலும் ஒரு விதி விலக்கு இருக்குமல்லவா?  அதுதான் இப்பதிவு.

நேற்றைய (03.12.2013) தி இந்து தமிழ் நாளிதழில் கதை ஒன்று படித்தேன். கதையின் சாராம்சம் இதுதான் :  லட்சுமி என்பவள் அவரின் அம்மா சீதனமாக கொடுத்த பழங்காலத்து அண்டா ஒன்றை கழுவி வெளியில் வைத்து உள்ளாள். இவள் வீட்டுக்கு உள்ளே சென்ற சமயத்தில் அண்டா காணாமல் போய்விட்டது. பக்கத்து வீட்டுக்காரி மீது சந்தேகம், ஆனால் அவள் எடுக்கவில்லை என்று சத்தியம் செய்கிறாள்.  குளித்து விட்டு ஈர சேலையோடு அங்காத்தா கோயிலில் சென்று வேண்டிகொள்ளும்படி ஒருவர் யோசனை சொல்கிறார்.  ஆத்தா கோயிலில் தாயத்து மந்தரித்து அவள் வீட்டு வாசலில் போட்டு விடு, அவள் குடும்பமே அழிந்துவிடும் என்கிறார் இன்னொருவர்.  அவளிடம் கொஞ்சம் மிளகாய் வாங்கி அதை சாந்தாக அரைத்து ஆத்தா மீது பூசிவிடு,  ஆத்தா துடித்து அவளை பலி வாங்கிவிடுவாள் என்கிறார் இன்னொரு பெண்மணி. 

லட்சுமி சரியென,  ஆத்தாவிடம் முறையிட அங்காத்தா கோயிலுக்கு செல்கிறாள். கோயிலில் ஒரே கூட்டம்,  போலீஸ் வேறு இருக்கிறது. என்னவென்று விசாரித்ததில்,  ஆத்தாவின் 50 பவுன் நகைகளை இரவு யாரோ திருடிவிட்டார்களாம்.  லட்சுமி பேசாமல் திரும்பி வந்துவிட்டாள்.

கதையின் உட்கருத்து தெரிந்ததே.  ஆனால் இந்த கதை எப்படி இந்து குழுமத்திலிருந்து வரும் ஒரு பத்திரிகையில் வெளிவந்துள்ளது. மிக மிக ஆச்சரியமான ஒரு விசயம். பத்திரிகை தர்மம் என்பது,  நமக்கு உடன்பாடு இல்லாத கருத்தாக இருந்தாலும் எழுதுபவரின் உரிமையை மதித்து நாம் வெளியிட வேண்டும் என்பதாக சொல்வார்கள்.

தி இந்து ஆசிரியர் குழுவிற்கும் நிர்வாகத்திற்கும் பாராட்டுக்கள்.

**************************************************************************************

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  நான்  பார்ப்பது செய்திகள், விவாதங்கள் அடுத்து திரைப்படப் பாடல்கள்.  கதைத் தொடர்களை பெரும்பாலும் பார்ப்பதில்லை. ஆனால் இதில் ஒரு விதி விலக்கு.  விஜய் தொலைகாட்சியில் இரவு பத்து மணிக்கு ஒளி/ஒலிபரப்பாகும் OFFICE  என்ற தொடரைப் பார்ப்பதுண்டு.

காரணம், அதில் வருகிற விசுவநாதன் என்னும் பாத்திரம்.  ஒரு கணினி நிறுவனத்தின் Country Head ஆக  கதையில் வருகிறார்.  ஒரு நிறுவனத்தை எவ்வாறு நடத்துவது? வேலை செய்பவர்களின் பதவிக்கேற்ற பொறுப்புகள் மற்றும் உரிமைகள் என்னென்ன?  என மிக அழகாக விளக்குகிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் நிறுவன மேலாண்மை குறித்த வகுப்பு எடுப்பது போல் உள்ளது. மிகவும் அருமை. குழுவாக வேலை செய்வதன் நோக்கம், அதன் பலன் போன்றவற்றை தெளிவாக விளக்குகிறார். ஊழியர் தவறு செய்யும்போது அதனை விசாரிக்கும் விதம், தண்டனை எனில் அதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என விளக்குவது, என நிறைய விசயங்களை நேயர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் அன்று வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவருடன் நடைபெறும் உரையாடலை பதிவு செய்வது மரபல்ல எனவும் இன்னும் பல கருத்துக்களை அவர் மூலம் சொல்கிறார்கள். வசனம் எழுதியவர் பெரும் பாராட்டுதலுக்கு உரியவர். இத்தொடரைப் பார்த்தால், ஒரு அலுவலகத்தை செம்மையாக நிர்வாகம் செய்ய யோசனைகள் கிடைக்கலாம். 

மேலும் காதல், காதலரிடையே ஏற்படும் ஊடல், நட்பு, அதனால் வரும் விட்டு கொடுக்கும் பண்பு  என மனதின் துல்லியமான உணர்வுகளையும் வெளிக்கொணரும் வண்ணம் வசனங்களும் காட்சி அமைப்புகளும் உள்ளன. நகைச்சுவை காட்சிகளும் நன்றாக உள்ளன.

இயலுமெனில்,  பாருங்களேன்.


.

கணக்கு எழுதுங்கள்

     வாரம் ஒரு பதிவு எழுதலாம் என ஆரம்பித்தும் வேலை பளு காரணமாக கடந்த சில வாரங்களில் எழுத இயலவில்லை. இன்று ஒரு எளிமையான ஆனால் மிகவும் அவசியமான ஒரு விசயம்.

காசேதான் கடவுளப்பா! அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!! என்பது கவிஞர் வாலி எழுதிய திரைப் பாடல்.
1968ம் ஆண்டு சக்கரம் என்ற படத்திற்காக எழுதியது. அனுபவம் வாய்ந்த எவ்வளவு உண்மையான வரிகள். அந்த கடவுளை மிகவும் கவனமாக கையாளவேண்டும். அதற்க்கு முக்கியமான ஒரு வழி, கணக்கு எழுதுவது. மிகவும் எளிதான ஒரு செயல்தான். தினமும் இரவில் படுக்கச் செல்லும் முன்பாக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அன்றைய வரவு செலவுகளை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுத வேண்டும். இதை யாருக்கும் காண்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் மட்டும் பார்த்துக் கொண்டாலே போதும். கணினி வைத்து இருப்பவர்கள் அவர்களுக்கு தெரிந்த வகையில் Excelவடிவிலோ அல்லது Tally மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தில் உங்களுக்கு லாபமோ அல்லது நட்டமோ எதுவானாலும் எழுதி வையுங்கள். ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு என்பது பழமொழி. எதற்கும் ஒரு கணக்கு இருக்க வேண்டும்.
 
     இதனால் ஏற்படும் நன்மைகள் பலப் பல.
 
   அன்றைய தினம் நீங்கள் செய்த பணிகள், நடந்து கொண்ட விதம் தெரியவரும். (வாழ்ந்த வகை என்றும் சொல்லலாம்)
 
   கொடுத்த பணம், வந்த பணம் எதனையும் பிற்காலத்தில் மறந்து போகலாம். ஆனால் கணக்கு எழுதினால் அதற்கு அவசியமில்லை.
 
   செலவு செய்கின்ற அளவு வரவுக்குள் இருக்கிறதா என பார்க்கலாம். அவசியமெனில் செலவைக் குறைக்கவோ அல்லது வருவாயை பெருக்கவோ முயற்சி செய்யலாம்.
  
   கணினியில் பதிவு செய்யும்பொழுது உங்கள் செலவுகளை வகைப்படுத்த முடியும், அப்போது எந்த வகையில் அதிகம் செலவு செய்கிறோம் என்பதனை பார்த்து அதனை நெறிப்படுத்தலாம்..

இன்னும் நிறைய பலன்கள் உள்ளன. வாங்கவேண்டிய பணம், கொடுக்க வேண்டிய பணம் அனைத்தும் நினைவுக்கு வரும். உங்கள் வரவு செலவு அறிக்கை தயார் செய்ய, வருமான வரி செலுத்த அனைத்திற்கும் இது பயன்படும்.

கணக்கு எழுதிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையை ஒரு ஒழுங்கிற்குள் கொண்டு வந்தது போல் உணர்வீர்கள்.

கணக்கு எழுதுங்கள். திறம்பட வாழுங்கள். வாழ்த்துக்கள்
 

Tuesday, November 19, 2013

இலங்கை வடக்கு மாகாண முதல்வரின் பேட்டி

இலங்கை வடக்கு மாகாண முதல்வரான திரு. சி. வி. விக்னேஸ்வரன் தி  இந்து தமிழ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கை தமிழரைப் பற்றி நமது பெரும்பாலான அரசியல்வாதிகளும் மக்களும்  எண்ணிக் கொண்டிருப்பதற்கு மாறாக கருத்துகள் உள்ளன. 

தமிழீழம் குறித்து  :  ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பதே வடக்கு மாகாண முதல்வரின் நிலைப்பாடாக உள்ளது.  தமிழக அரசியல்வாதிகள் தமிழீழம் குறித்து பேசி வருவதைப் பற்றி கேட்டால்,  அவர்கள் உணர்வு பூர்வமாக பேசுகிறார்கள்.  நாங்கள் யதார்த்தத்தை உணர்ந்து அறிவு பூர்வமாக, நிதானமாக யோசிக்கிறோம்.  இது உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டம் என்கிறார்.

தமிழக மீனவர்கள் கைது பற்றி :  தமிழக மீனவர்கள் இழுவலை படகுகள் மூலம் இந்திய பிராந்தியத்தில் மீன்களை வாரி இழுத்து காலி செய்து விட்டார்கள். இழுவலை படகுகளால் மீன்கள் மட்டுமல்ல, பவளப் பாறைகளும் இழுக்கப்பட்டு அழிந்து வருகின்றன. இலங்கையில் இழுவலை படகு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக மீனவர்கள்  எங்கள் பகுதியில் நுழைந்து இரவு ஒரு மணியளவில் அதுவும் எங்கள் கண் பார்வைக்கு எட்டும் தூரத்திலேயே இலங்கையில் உள்ள கடல் வளங்களையும் அழிக்கும் வகையில் மீன் பிடிக்கிறார்கள். இன்று பயன் அடைந்து கொண்டிருப்பவர்கள் இந்த படகுகளுக்கு சொந்தக்காரர்களான பெரும் பணக்காரர்கள் தானேயொழிய சிறு மீனவர்கள் அல்ல என்றும் இழுவலை படகுகளை விட்டுவிட்டு மீண்டும் கரை வலையை உபயோகித்தால் கடல் வளம் பெருகும். கடல் அன்னை பூரிப்பாள், என்கிறார்.

தமிழர் சிங்களர் உறவு : தமிழரும் சிங்களரும் சேர்ந்து இணக்கமாக வாழ்வதற்க்கான வகை பற்றி அவரிடம் கேட்டபோது, சிங்களர்களே சிறுபான்மையினர் மனோநிலையில்தான் உள்ளனர். மற்றவரைக் காட்டிலும் நாம் தாழ்ந்துவிட்டோம் என்ற எண்ணத்தில் எங்களை துன்புறுத்துகின்றனர். இதற்க்கு காரணம் தமிழ்நாடுதான். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் பேச பேச இத்தனை கோடி மக்களின் ஆதரவு இலங்கை தமிழ் மக்களுக்கு இருக்கிறது எங்களுக்கு யாரும் இல்லை என்ற எண்ணம் மேலோங்க எங்களை துன்புறுத்தி இன்பம் காண்கிறார்கள் என்கிறார் விக்னேஸ்வரன் அவர்கள்.

முன்னாள் நீதிபதியான சி.வி. விக்னேஸ்வரன், ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்,  மக்கள் சேவை என்பது ஆன்மீகத்தின் ஒரு பகுதியெனவும் அரசியலுக்கு தானாக வரவில்லை, அரசியலுக்குள் தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட்டதுதான் அரசியலில் இவரது முதல் பணி.  இவரது பேட்டி முழுவதும் ஆங்கில சொற்றொடர் எதுவும் இல்லாமல் தூய தமிழில் அழகாக உள்ளது. மிகவும் மென்மையான சொற்களைக் கொண்டு தனது கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். போர்க்குற்றங்கள், விடுதலைப்புலிகள் பற்றி எதுவும் கூறவில்லை. தற்போதைய நிலை மற்றும் அதிகார பகிர்வு, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் குறித்து பேசியுள்ளார்.

வடக்கு மாகாண முதல்வர் என்னும் பொழுது இவரது கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. நாம், தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் இலங்கை குறித்த கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமோ எனத் தோன்றுகிறது.  அங்குள்ள தமிழர்களுக்கு அதிகாரமும் வளமான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டிய முயற்சிகளை முன்னெடுப்போம்.


மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் வரவேற்கிறேன். இந்த பிரச்னை குறித்த நமது எண்ணத்தை செம்மைப்படுத்த உதவட்டும்.  

Sunday, November 10, 2013

காமன்வெல்த் நாடுகள் அமைப்பும் இலங்கையும்

உலகின்  சில நாடுகள் ஆங்கிலேயர்களால் அடிமைபடுத்தப்பட்டு ஆட்சிச் செய்யப்பட்டது.  பின்பு ஒவ்வொன்றாக சுதந்திரம் பெற்றன. இந்த நாடுகள் அனைத்தும் காமன்வெல்த் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அடிமைப்படுத்தியதை  ஞாபகப்படுத்தும் இந்த அமைப்பு தேவையா? இந்த அமைப்பின் நிரந்தர தலைவர் இங்கிலாந்தின் ராணி எலிசபெத் அவர்கள்தான். அடிமையான நாடுகளைக் கொண்டு ஒரு சங்கம் அதற்கும் அவர்தான் தலைவர். என்ன விந்தை?

இதன் மொத்த உறுப்பினர் நாடுகள் 53.  அதில் 32 நாடுகள் 15 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய தேசங்கள். (நமது சென்னை மாநகர மக்கள் தொகை 89 லட்சங்கள்). மேலும் இதில் 5 நாடுகள் பெரியதாக இருந்த போதிலும்  சரியான வளர்ச்சி அடையாததால் சிறிய நாடுகளின் தொகுப்பில் வருகிறது.  இதில் குறிப்பிடத்தக்க நாடுகள் என்று பார்த்தால் கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மட்டும்தான். இதிலும் கனடா நாட்டு பிரதமர் இலங்கையில் நடைபெறும் கூட்டத்தை புறக்கணித்து விட்டார். ஆசிய மற்றும் ஐரோப்பா  கண்டங்களில் உள்ள முக்கிய நாடுகளான ரஷ்யா, சீனா, ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்றவை இந்த அமைப்பில் அங்கம் வகிக்கவில்லை.

இப்போது இலங்கையில் நடப்பது போல் கடந்த 93ஆம் வருடத்திலிருந்து கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.  இதில் சுமார் 5 கூட்டங்களில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளவில்லை. இந்தியாவின் சார்பாக அமைச்சர் ஒருவர்தான் கலந்துகொண்டு இருக்கிறார்.

உப்பு பெறாத விசயத்தை நமது அரசியல்வாதிகள் ஊதி பெரிதாக்கி விட்டார்களோ எனத் தோன்றுகிறது.

இவ்வளவு சாதாரணமான தேவையில்லாத ஒரு அமைப்பின் எந்தவொரு கூட்டத்திலும் இந்திய குடியரசு தலைவரோ அல்லது பிரதமரோ கலந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. சரி, ஒரு அமைப்பில் உறுப்பினர் ஆகிவிட்டோம், கூட்டத்தில் கலந்து கொள்வதுதான் முறை என்னும் பட்சத்தில் ஒரு துணை அமைச்சரையோ அல்லது வெளியுறவுத் துறை செயலரையோ அனுப்பி வைக்கலாம். இது போதுமானது.
**********

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு நியாயமான விசாரணை நடைபெறவில்லை, குற்றவாளிகளை தண்டிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ராஜபக்சே முதல் குற்றவாளி என்பதாக கூறி இந்த காமன்வெல்த் கூட்டத்தை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை.

இந்திய அரசு இலங்கையின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதன் காரணம், அது பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் கூட்டு சேர்ந்து இந்தியப் பெருங்கடலில் அவர்களின் ஆதிக்கத்திற்கு தளமாக மாறும், அதை தடுக்கவே இந்தியா இப்படி செயல்படுவதாக சொல்கிறார்கள். 

அளவில், மக்கள் தொகையில் மற்ற  எந்த  வகையில்  பார்த்தாலும் ஒரு சிறிய நாடான இலங்கை இந்தியாவை மறைமுகமாக மிரட்டும் தொனியில் நடந்து கொள்வதா? அதற்கு பதில் வினை செய்வதற்கு இந்தியா தடுமாறுவதா? இந்த சமயத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய விமானப்படையால் நடத்தப்பட்ட,  யாழ்ப்பாணம் மீது உணவு பொருட்களை இறக்கிய “ஆபரேஷன் பூமாலை”  என்ற நிகழ்ச்சியை நினைவு கொள்வோம். நம்மால் முடியும். தலைமையின் கையில்தான் உள்ளது எப்படி செய்வது என்பது.

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா நாட்டு பிரதமர் எப்போதோ அறிவித்து விட்டார். இங்கிலாந்தை ஆதாரமாக கொண்டுதான் இந்த அமைப்பே, எனவே அவர்கள் புறக்கணிக்க முடியாது. ஆனால் இங்கிலாந்து பிரதமர் தான் கலந்து கொள்வதாகவும், அங்கு போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுவதாகவும் லண்டனில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகளுக்கு மதிப்பளித்து பேட்டி கொடுக்கிறார். ஆனால் இந்தியா முடிவெடுப்பதில் ஏன் இந்த குழப்பம்? தாமதம்?.

தமிழர்களுக்கு தகுந்த அதிகாரமும், வாழ்வுரிமையும் பெற்று தருவதோடு இலங்கையை நமது நம்பிக்கைக்குரிய ஒரு நட்பு நாடாக மாற்றுவது இந்திய அரசின் பொறுப்பு. இதற்காக எந்தவிதமான அணுகுமுறையை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.  இந்தியாவில் பிறந்த அரசியல் மாமேதை சாணக்கியரின் சாம, தான, பேத, தண்டம் முறைகளை கையாண்டு வெற்றி கொள்ள வேண்டுகிறோம்.








  

Tuesday, November 5, 2013

ஜெயமோகன் அவர்களின் தங்க்லீஷ் யோசனையும் மறுப்பும்

தமிழை இனி ஆங்கில எழுத்துகளில் எழுதலாம் -அதாவது அம்மா என்பது  amma – என்று எழுத்தாளர் ஜெயமோகன், புதிதாக வந்து கொண்டிருக்கும் தி இந்து தமிழ் நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார். 
   
நாட்டில் இப்போது மக்களுக்கு அடிப்படை பண்புகள் மறைந்து பொருள் ஒன்றே ஆதாரம் என அதனைச் சுற்றி குணங்களும் அமைந்து வருகின்றன. அறிவை வளர்த்துக்கொள்ள கல்வி என்பதாக இல்லாமல்,  இன்று மருத்துவ, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு எப்படியாவது  மதிப்பெண் எடுப்பதே குறிக்கோளாக ஆகிவிட்டது. இதைப்போல ஜெயமோகனுக்கு தனது புத்தகம் விற்கவில்லை எனக் கவலை. மக்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த முயற்சி செய்வதை விட்டுவிட்டு ஆங்கில புத்தகங்கள் அதிகம் விற்பதால் நாமும் தமிழை ஆங்கிலத்திலேயே எழுதலாம் என்கிறார்.  மிகவும் அபத்தமான ஒரு யோசனை.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என தொல்காப்பியன் காலம் முதல் சிறப்பானதொரு இலக்கண அமைப்பைக் கொண்டு, திருக்குறள், ஆத்திச்சூடி, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் என இலக்கிய வளங்களோடு வாழ்வாங்கு வளர்ந்து வந்த தமிழ் மொழியை காலத்திற்கேற்ப வளர்க்க வகை செய்யாமல் மற்றொரு மொழியின் பின் மறைந்து கொள்ள சொல்வது சோம்பேறித்தனமும் இயலாமையின் வெளிப்பாடும் ஆகும்.

முதலில் நமக்கு நமது மொழியின் மீது பற்று வேண்டும். மாறி வரும் உலக சூழலுக்கு ஏற்ப மொழியை வளர்க்க முயற்சிகள் செய்ய வேண்டும். எனது தாயினால் எனக்கு பெரிதாக நன்மைகள் எதுவும் இல்லை எனவே, பலவிதமான நன்மைகள் பெற்று தரும் இன்னொரு பெண்ணை எனது தாயாக அமைத்துக் கொள்வேன் என்பது எவ்வளவு மோசமான கற்பனையோ அந்தளவுக்கு மோசமானது தமிழை அப்படியே ஆங்கிலத்தில் எழுதலாம் என்பது. 

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ், அரசு அலுவல் மொழிகளில் ஒன்றாக உள்ளது. உலக மக்கள் அனைவரும் ஆங்கிலம் ஒன்றைத்தான் நம்பி வாழ்ந்து வருகிறார்களா? என்றால், இல்லை. இரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, கொரியா போன்ற நாடுகளில் ஆங்கிலத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. பல வருடங்களுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் அருகே கொரியா நாட்டு கார் கம்பெனியின் தொழிற்சாலை அமைந்தபொழுது அவர்களின் துணை நிறுவனத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  அங்கு வந்திருந்த கொரிய பொறியாளர்களின்  கணினியில் ஆங்கிலம் இல்லை. பெரும்பாலனவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. 

குழந்தைகள் ஒரே சமயத்தில் இரண்டு எழுத்துருக்களை கற்று கொள்ள சிரமப்படுகிறார்கள் என்னும் இவரது வாதம் சரியானது அல்ல. இளமையில் கல்,  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்னும் சொற்றொடர்கள் பொய் என சொல்வார் போல் உள்ளது. வீண் வாதம்.    முயற்சியும் சரியான பயிற்சியும் இருந்தால் போதும் குழந்தைகள் சாதிப்பது நிச்சயம். குழந்தைகள் கல்வி பயில்வதை மிருகங்களை வித்தைக்கு பழக்குவதோடு ஒப்பிடுகிறார். என்ன கொடுமை? அய்யா, கல்வி என்பது வாழ்க்கையின் அடிப்படை. வித்தை என்பது பிழைப்பு. 

எழுத்துருக்கள் மாறாத அடையாளங்கள் அல்ல என்கிறார். சரிதான், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்கள் தமிழில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இது போன்று நமது மொழியில் மாற்றங்கள் செய்யலாமே.  அதை விடுத்து எழுத்து, சொல் என்ற இரண்டு அடிப்படைகளை அழித்து இன்னொரு மொழிக்கு மாறி விடுவது நியாயம் அல்ல.  இணையத்தில் வெளியிட ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதாக சொல்லியுள்ளார்.  இது கணினியின் விசைப்பலகையை பயன்படுத்த ஒரு எளிய வழி.  அவ்வளவே.  இதனால் தமிழ் எழுத்தோ, சொல்லோ மாறுவது இல்லை. 

மலாய் போன்ற மொழிகள் ஆங்கில எழுத்துருக்களை பயன்படுத்துவதாக சொல்கிறார். அவர்களை நாமும் பின்பற்ற வேண்டுமென்பது என்ன நியதி? உலகம் முழுதும் போற்றப்படும் திருக்குறளை தந்தார் திருவள்ளுவர். உலகின் பல்வேறு அறிஞர்கள் தமிழ் மொழியின் வளமையால்  ஈர்க்கப்பட்டு தமிழ் பயின்று உள்ளனர்.  ஏன்? சமீபத்தில் கூட வட நாட்டு எம்.பி. ஒருவர் தமிழின் சிறப்பை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.  எனவே உலகமே பின்பற்ற வேண்டும் என்கிற அளவுக்கு தமிழ் மொழியை காலத்திற்கு ஏற்ப அறிவியல் மாற்றங்களுக்கு ஏற்ப வளர்க்க முயற்சிகளை முன்னெடுப்போம். 

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் இல்லை என்ற பாரதியின் கூற்றை மெய்ப்படுத்துவோம். 


Monday, October 28, 2013

தீபாவளி


நாம் கொண்டாடும் முக்கியமான  பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று.  ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு காரணம் உண்டு.  தீபம் என்றால் விளக்கு.  ஆவளி என்றால் வரிசை.  விளக்குகளை வரிசையாக வைத்து கொண்டாடுவது என்று சொல்லப்படுகிறது. முதலில் வட இந்தியாவில் சமண மதத்தவரால் (மார்வாடிகள்) கொண்டாடப்பட்டு பின்பு பரவி மற்ற  இடங்களிலும் உள்ள இந்துக்களும் கொண்டாடும் பண்டிகையானது.

தீபாவளி பண்டிகையை அவர்கள் புத்தாண்டின் தொடக்கமாக பார்க்கிறார்கள்.  புது கணக்கு ஆரம்பித்து வியாபாரம் தொடங்க ஒரு நல்ல நாளாக லட்சுமி பூஜை செய்து கொண்டாடுகிறார்கள். இவர்களுடன் வரவு-செலவு வைத்திருக்கும் நம்மவர்களுக்கு இது தெரியும்.  இதுதான் உண்மையான காரணமும் கூட.   மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளுக்கு அன்று விடுமுறை கிடையாது.  MUHURAT TRADING  என்று ஒரு சிறப்பு வர்த்தகமும் அன்று நடைபெறும்.

 ஆனால், பார்ப்பனர்கள் தீபாவளி கொண்டாட காரணமாக ஒரு கதை சொல்லி வருகிறார்கள்.  அசுரனை அழித்ததற்க்கான விழாவாம்.  அசுரன் என்பவன் யார் என்றால் ஆரியர்களின் பகைவனாம். ஆர்யர்களின் பகை என்றால் ஆதியில் திராவிடர்தான்.  அப்படி என்றால் நம்மை அழித்ததற்கு நாமே விழா எடுத்து கொண்டாடுவதா? நம் மக்கள் இதையும் நம்பி மதி மயங்கி உள்ளனர்.  இது பொய்யான கதை. தீபாவளிக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த பொய்யான கதைகளை மறுத்து, 

 தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
திருமுருக. கிருபானந்த வாரியார்
கா. சுப்ரமணிய பிள்ளை
பேராசிரியர் அ. கி. பரந்தாமனார்
கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
டாக்டர்  மா. இராசமாணிக்கனார்

 போன்ற தமிழ் அறிஞர்கள் விரிவாக ஆராய்ந்து தாங்கள் எழுதிய புத்தகங்களில் பதிவு செய்யுதுள்ளனர். 

 பார்ப்பனர்களின் சூழ்ச்சியான கதைகளை நம்ப வேண்டாமென தந்தை பெரியாராலும்  வலியுறுத்தப்பட்டது.

 இப்படி சொல்லப்பட்டுள்ள கதையும் அறிவுக்கு சம்பந்தமில்லாமல், மேலும் ஆபாசம் நிறைந்தாக உள்ளது. ஒரு அசுரன் பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு எடுத்துக் கடலில் சென்று ஒளிந்து கொண்டதாகவும் விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து அவனை அழித்து பூமியை மீட்டதாகவும்,  பூமித்தாய் பன்றியின் மீது காதல் கொண்டு சேர்ந்ததால் இன்னொரு அசுரன் பிறந்ததாகவும்,  அவன் சுரர்களுக்கு (சுரா என்ற மதுவை குடிப்பதால் தேவர்கள் சுரர்கள்.  தேவர் அல்லாதவர் அசுரர்)  தொல்லையாக இருந்ததால் அவனையும் கிருஷ்ண அவதாரம் எடுத்து அழித்ததாக கதை.

 எவனோ ஒரு முட்டாள் பரதேசி இஷ்டத்திற்கு கதை சொல்லுவான்.  நாமும் அதை ஆமாம் என்று கேட்டுக்கொண்டு கொண்டாட வேண்டுமாம். என்ன கொடுமை இது?

 தீபாவளியை விமர்சையாக கொண்டாடுவதற்க்கான காரணங்கள்.

1.       பண்டிகை என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. வாழ்க்கையில் பண்டிகைகளை கொண்டாடத்தான் வேண்டும்.  காலப்போக்கில் சில காணாமல் போகலாம். சில பண்டிகைகள் புதிதாக வரலாம்.

2.       நம் மக்களுக்கு, தை மாதத்தில் கொண்டாடும் பொங்கலுக்கு பிறகு சுமார் எட்டு மாதங்களுக்கு பெரிய பண்டிகை எதுவும் இல்லை. நீண்ட காலம் கழித்து வருவதால் தீபாவளியை பெரியதாக கொண்டாடுவதாக இருக்கலாம்.

3.       அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், இன்னும் பிற முதலாளிகள் அனைவரும் இந்த ஆயுத பூஜை, தீபாவளி சமயத்தில்தான் வருடாந்திர ஊக்கத்தொகை, அன்பளிப்புகள் போன்றவைகளை கொடுக்கிறார்கள். எனவே, நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்கு புத்தாடை எடுப்பது, பட்டாசு வெடிப்பது, மருமகனுக்கு விருந்து வைப்பது போன்றவை கொஞ்சம்  எளிதாகிறது.  

தீபாவளியை கொண்டாடுவோம்.  (அசுரனை அழித்ததின் அடையாளமாக என்ற அபத்தமான கதையின் அடிப்படையில் அல்ல)

 வாழ்வில் நல்லதொரு தொடக்கம் அமையட்டும்.  உங்கள் வியாபாரம் நன்றாக தொடங்கட்டும்.  உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற விளக்கு வரிசையாக ஒளி வீசட்டும்.  இதுதான் தீபாவளி.

 அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.