Sunday, December 15, 2013

மற்றவரின் கருத்துக்கள் நம்மை பாதிப்பதா?

வாழ்க்கையில் நாம் தினமும் வித விதமான மனிதர்களையும் அவர்களின் பேச்சு மற்றும் செயல்களையும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இவர்களில் சிலரின் பேச்சுக்கள் அடுத்தவரின் மனநிலையை புண்படுத்துமாறு அமைந்து விடுகிறது. உதாரணத்திற்கு  சில:

சாலையில் நடந்து செல்லும்பொழுது எதிரில் தெரிந்தவர் ஒருவர் பார்த்து, என்னப்பா, ஆள் இளைத்து போய்விட்டாய், உடனே டாக்டரைப் பார்.  பெரிய பெரிய வியாதிகளுக்கு எல்லாம் இதுதான் ஆரம்பம் என்று பெரிய அறிவாளி போல் சொல்லிவிட்டு போய்விடுவார். கேட்டவர் மனம் கலங்க ஆரம்பித்து விடும்.

ஒரு குழந்தை பிறந்ததின் புண்ணியதான விழாவாக இருக்கும். அதில் ஒரு பெண்மணி,  என்ன, இரண்டாவதும் பெண் குழந்தையே பிறந்துள்ளது என்று சொல்லிவிட்டு, இருக்கட்டும், இந்த காலத்தில் பெண்கள்தான் பிற்காலத்தில் காப்பாற்றுவார்கள் என்றும் சொல்லிவைப்பார். அந்த தாயின் மனம் எவ்வளவு பாடுபடும்?

திருமண விழாவில் முன்வரிசையில் ஒருவர்,  என்ன கொஞ்சம் பொறுமையாக பார்த்திருந்தால், இன்னும் கொஞ்சம் நிறமான பொண்ணாக இருந்திருக்கலாம்.  எல்லாம் பணம் செய்யும் வேலை, என்ன செய்வது? என்று பேசி வைப்பார்.  

இப்படி பல சமயங்களில் சிலரின் பேச்சு இப்படித்தான் உள்ளது. தேவையில்லாத விசயத்தை பேசி பிரச்னைகள் வருவதும் உண்டு. நாம் ஒரு விசயத்தைப் பற்றி பேசும் பொழுது எதிரே இருப்பவரின் இடத்தில் நாம் இருந்தால் எப்படி என்ற கோணத்தில் யோசித்துப் பேசவேண்டும். வாய்மை என்பது  எவருக்கும் தீங்கு இல்லாமல் பேசுவதே என்று திருவள்ளுவர் சொல்லியுள்ளார். 

சரி, இப்படி வரும் பேச்சுக்களை நாம் எப்படி எதிர்கொள்வது? கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதுதான் சிறந்த வழி. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. NOBODY CAN MAKE YOU FEEL INFERIOR WITHOUT YOUR CONSENT “  என்பதே. அதாவது, நீங்கள் அனுமதிக்காத வரையில், யாராலும் நீங்களே உங்களை குறைவாக நினைத்துக் கொள்ளும்படி செய்ய முடியாது.    

மற்றவர்கள் உங்களைப் பற்றி கூறும் தப்பான கருத்துகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதன் பொருள். ஒரு அலுவலகத்தில் உங்களைத் தெரியாத ஒரு குமாஸ்தா உங்களை சரியாக நடத்தாமல் பேசியிருப்பார்.  பேருந்தில் நடத்துனர் உங்களை திட்டி இருக்கலாம். இவற்றையெல்லாம் மனதில் வைத்து கவலைப்படுவது வீண் வேலை. உங்களைப் பேசியப் பிறகு அவர்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். உங்களை மறந்தே இருக்கலாம். இப்படித்தான் போகிற போக்கில் சிலர் சொல்லிவிட்டு போவதும்.  நமது மனம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. அதில் இப்படி  கவலைகளையும் பயத்தையும் வைப்பது மனதின் செயல்பாட்டை வெகுவாக குறைப்பதோடு உங்கள் உண்மையான திறமையும் வெளிப்படாது.

வாழ்க்கையில் சரி என்பதற்கும் தப்பு என்பதற்கும் அளவுகோல் எதுவும் இல்லை. ஒருவருக்கு சரி எனப்படுவது இன்னொருவருக்கு தப்பாக இருக்கலாம். ஒரு நாட்டில் நல்லது என்பது இன்னொரு நாட்டில் கெட்டதாக இருக்கலாம். ஒரு ஆங்கிலேய பெண்மணி நமது நாட்டிற்க்கு சுற்றுலாவில் வந்தார். நமது சுற்றுலா அமைச்சகத்தின் ஏற்பாட்டில் சென்னையில் ஒரு வீட்டில் சில நாட்கள் தங்கினார். அந்த சமயத்தில் அந்த வீட்டு பெண்ணிற்கு திருமணம் நடக்க இருந்தது. அந்த பெண்ணிடம், மாப்பிள்ளையைப் பற்றிக் கேட்டார். அந்த வீட்டு பெண், எனது பெற்றோர் பார்த்து சொன்னார்கள், நான் இன்னும் மாப்பிளையிடம் சரியாக பேசவில்லை என்று சொல்லியுள்ளார். அதற்கு அந்த ஆங்கிலேயப் பெண்மணி, என்னது, முன்பின் தெரியாத ஒருவரை திருமணம் செய்யப் போகிறாயா? என ஆச்சரியப்பட்டு கேட்டாராம். காதலிப்பது சரியல்ல இங்கு, ஆனால் காதலிக்காமல் கல்யாணம் செய்வது சரியல்ல அங்கு.

எனவே, சரி என்றும் தப்பு என்றும் எதுவும் இல்லை. ஒவ்வொன்றும் ஒரு அனுபவம்.  அந்த அனுபவத்தில் இருந்து நமக்கு ஏற்படும் விளைவுகளைக் கொண்டு பாடங்கள் பெற்று அதன் அடிப்படையில் அடுத்த அடியை எடுத்து வைப்போம்.

எவரோ ஏதோ சொல்கிறார் என்பதற்காக கவலை வேண்டாம். தெளிவாக இருங்கள். தைரியமாக செயல்படுங்கள்.

பின்குறிப்பு : 14.12.2013 தி இந்து தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையை வாசித்ததின் விளைவாக எழுதிய பதிவு இது. 

Robin Sharma எழுதியுள்ள  The Monk who sold his ferrari என்ற நூலிலும் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள எண்ணங்கள் என்ற நூலிலும் இக்கருத்தைப் பற்றி மேலும் விரிவாக சொல்லப்பட்டு உள்ளது.



No comments:

Post a Comment