Wednesday, December 4, 2013

கணக்கு எழுதுங்கள்

     வாரம் ஒரு பதிவு எழுதலாம் என ஆரம்பித்தும் வேலை பளு காரணமாக கடந்த சில வாரங்களில் எழுத இயலவில்லை. இன்று ஒரு எளிமையான ஆனால் மிகவும் அவசியமான ஒரு விசயம்.

காசேதான் கடவுளப்பா! அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!! என்பது கவிஞர் வாலி எழுதிய திரைப் பாடல்.
1968ம் ஆண்டு சக்கரம் என்ற படத்திற்காக எழுதியது. அனுபவம் வாய்ந்த எவ்வளவு உண்மையான வரிகள். அந்த கடவுளை மிகவும் கவனமாக கையாளவேண்டும். அதற்க்கு முக்கியமான ஒரு வழி, கணக்கு எழுதுவது. மிகவும் எளிதான ஒரு செயல்தான். தினமும் இரவில் படுக்கச் செல்லும் முன்பாக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அன்றைய வரவு செலவுகளை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுத வேண்டும். இதை யாருக்கும் காண்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் மட்டும் பார்த்துக் கொண்டாலே போதும். கணினி வைத்து இருப்பவர்கள் அவர்களுக்கு தெரிந்த வகையில் Excelவடிவிலோ அல்லது Tally மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தில் உங்களுக்கு லாபமோ அல்லது நட்டமோ எதுவானாலும் எழுதி வையுங்கள். ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு என்பது பழமொழி. எதற்கும் ஒரு கணக்கு இருக்க வேண்டும்.
 
     இதனால் ஏற்படும் நன்மைகள் பலப் பல.
 
   அன்றைய தினம் நீங்கள் செய்த பணிகள், நடந்து கொண்ட விதம் தெரியவரும். (வாழ்ந்த வகை என்றும் சொல்லலாம்)
 
   கொடுத்த பணம், வந்த பணம் எதனையும் பிற்காலத்தில் மறந்து போகலாம். ஆனால் கணக்கு எழுதினால் அதற்கு அவசியமில்லை.
 
   செலவு செய்கின்ற அளவு வரவுக்குள் இருக்கிறதா என பார்க்கலாம். அவசியமெனில் செலவைக் குறைக்கவோ அல்லது வருவாயை பெருக்கவோ முயற்சி செய்யலாம்.
  
   கணினியில் பதிவு செய்யும்பொழுது உங்கள் செலவுகளை வகைப்படுத்த முடியும், அப்போது எந்த வகையில் அதிகம் செலவு செய்கிறோம் என்பதனை பார்த்து அதனை நெறிப்படுத்தலாம்..

இன்னும் நிறைய பலன்கள் உள்ளன. வாங்கவேண்டிய பணம், கொடுக்க வேண்டிய பணம் அனைத்தும் நினைவுக்கு வரும். உங்கள் வரவு செலவு அறிக்கை தயார் செய்ய, வருமான வரி செலுத்த அனைத்திற்கும் இது பயன்படும்.

கணக்கு எழுதிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையை ஒரு ஒழுங்கிற்குள் கொண்டு வந்தது போல் உணர்வீர்கள்.

கணக்கு எழுதுங்கள். திறம்பட வாழுங்கள். வாழ்த்துக்கள்
 

No comments:

Post a Comment