Friday, December 12, 2014

சுதந்திரம் - ஒரு பார்வை.



கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!
இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்...

அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்துவிட்டிருப்பான்
அந்த வெள்ளைக்காரன்,
நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!

நாடு முழுவதும் எப்போதோ bullet rail வந்திருக்கும்,
நாம் இப்போது தான் மீட்டர்கேஜ்களை broad gauge களாக மாற்ற
போராடிக்கொண்டு இருக்கிறோம்!

ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த
வெள்ளைக்காரன்,
நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டெண்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!

நாடு முழுவதும் வெள்ளைக்காரனால் கட்டப்பட்ட ஆயிரக்கணக்க்கான கட்டிடங்களும் பாலங்களும் அணைகளும் அப்படியே இருக்க
முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!

நாட்டிற்கு வருமானத்தை தரும் சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான் வெள்ளைக்காரன்!

பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை வந்திருக்கும்!
நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும், இடஒதுக்கீட்டுக்கும்
போராடிக்கொண்டு இருக்கிறோம்!

வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது,

அடித்து வாங்க சக்தியில்லாமல் அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!
மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம் வாங்கினோம் மக்களுக்கு வாங்க
தவறிவிட்டோம் !

120 கோடி மக்கள் தொகையில்
70
கோடி வறுமைக்கு கீழ்!
பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
70
ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!

இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க
பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!
எப்படி குத்திக்கொள்ளமுடியும் கொடியை,
ஒவ்வொரு முறை குத்தும்போதும் இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!

நம்நாட்டு பெண்களை கூட்டம் கூடி கற்பழிக்கும் வரை,
நம்நாட்டு குழந்தைகள் தெருவில் நின்று பிச்சைகேட்கும் வரை,
நம்நாட்டு பெண்சிசுக்கள் கள்ளிப்பாலில் சாகும்வரை
நமக்கெல்லாம் அருகதையில்லை சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!

ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும், அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும் என்றால்
நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம்
நல்ல காலம் வரும்வரை!

                                  -------------

மேற்கண்ட கருத்துக்கள் நண்பர் ஒருவர் WhatsApp மூலம்  அனுப்பியது. இது சரிதான் எனத் தோன்றுகிறது.

பென்னி குய்க் முல்லை பெரியாறு அணை கட்டியபோதும் காவிரியின் குறுக்கே மேட்டூரில் வெள்ளைக்காரன் அணை கட்டியபோதும் எதிர்ப்போ பிரச்சனையோ வந்ததாக தெரியவில்லை. ஆனால் இப்போது அந்த அணைகளுக்கு தண்ணீர் கொண்டு வர ஆயிரம் பிரச்னைகள்.

இந்தியா முழுவதும் அளந்து அதற்கு சர்வே எண் கொடுத்து ஒவ்வொன்றிக்கும் எல்லை கற்கள் நட்டு, நஞ்சை நிலம், புஞ்சை நிலம், வீட்டு மனை, ஏரி, புறம்போக்கு, இதில் பாதை செல்கிறது என அப்போதே பிரித்து அளந்து வைத்து விட்டான்.  ஆனால் இப்போது அனைவருக்கும் ஆதார் கார்டு கொடுக்க தடுமாறி கொண்டு இருக்கிறோம். முதலில்  ஆதார் கட்டாயம் என்றார்கள். பின்னர் அவசியமில்லை என்றார்கள். மறுபடி இப்போது ஆதார் அட்டைக்கு மக்கள் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். 

ஏன் இப்படி?

மக்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. எழுதும் உரிமை, பேசும் உரிமை, வாழும் உரிமை என பல உரிமைகள் கிடைத்துவிட்டன. இதனை ஆக்க பூர்வமாக பயன்படுத்துவது மக்களின் மன நிலையை பொறுத்தது. ஜப்பானில் அரசு பேருந்தின் இருக்கை கிழிந்து இருந்தால் அந்த நாட்டு குடிமகன் அதை உடனே தைக்க தொடங்கி விடுவானாம்.  நமது ஊரில் பக்கத்துக்கு வீட்டுக்காரனோடு சண்டை என்றாலும் அரசு பேருந்தை தான் கல்லெடுத்து அடிக்கிறான். இது சுதந்திரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளும் விதம்.

அடுத்தது பணம்.

தான் நன்றாக வாழ வேண்டும் என்றால் பணம் மட்டுமே பிரதான தேவை என்ற பெரும்பான்மையான மக்களின் முடிவும்,  பணம் இருந்தால் தான் மதிக்கப்படுவார் என்ற தற்போதைய நிலையும்  மக்களை பணத்தை தேடி ஓடச் சொல்கிறது. ஆனால், ஒருவனை பணக்காரன் என்று எப்படி முடிவு செய்வது? எங்கள் கிராமத்தில் மோட்டார் பைக் வைத்து இருந்தால் வசதியானவர் என்று அர்த்தம். கார் வைத்து இருந்தால் பணக்காரன் என்று கொள்ளலாம். இங்கு நகரத்தில் ஒரே வீட்டில் 2, 3, கார்கள் கூட உள்ளன. இந்தியாவில் பெரிய பணக்காரர் அம்பானி என்றால் உலகில் அவர் பில் கேட்ஸ் மற்றும் சிலருக்கு குறைந்தவர் ஆகிறார்.  அப்படியென்றால் யார் பணக்காரர்? என்னைக் கேட்டால், கோடி கோடியாக பணம் இருந்தாலும், பணம் இல்லாமல் பிளாட்பாரத்தில்  இருந்தாலும், இரவு சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கு படுத்தால் காலை 6 மணி வரை எவனொருவன் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக தூங்குகிறானோ அவனே பணக்காரன்.

சரி, விசயத்திற்கு வருவோம்.

இந்த பண விஷயம் மனிதனை படுத்துகிறது. ஜெயலலிதாவிற்கு தண்டனை என தீர்ப்பு சொன்ன நாளில், பேருந்துகள் ஓடாத பொழுது, கோயம்பேட்டிலிருந்து ஆட்டோக்கள் வசூலித்த தொகை, கடைகள் மூடிய நிலையில் இரவில் குழந்தைக்கான பாலிற்கு கூட அநியாய விலை சொன்ன கடைக்காரன் என பல கொடுமைகள். விசாகபட்டினத்தை புயல் தாக்கி சேதப்படுத்திய  நிலையில் குடிக்கும் தண்ணீரை கூட பல பல மடங்கு அதிக விலை கொடுத்த வாங்க வேண்டிய அவலம். எவன் எக்கேடு கெட்டால் என்ன, எனக்கு எப்படியாவது பணம் வேண்டும் என்ற நமது மக்களின் நிலைப்பாட்டை என்னவென்று சொல்வது?  

இதேதான் அரசியல்வாதிகளிடத்திலும். எளிதில் பணம் சம்பாதிக்க அரசியல் ஒரு வழியாகிவிட்டது. கடந்த 50 வருடங்களாக எத்தனை ஊழல்கள். பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் பதவியில் இருக்க வேண்டும். பதவி என்றால் மக்களுக்கு நல்லது செய்ததாக காட்டவேண்டும். சரியோ, தப்போ என பார்ப்பதில்லை,  மக்களின் உணர்வுகளை தூண்ட கூடிய விஷயங்களை என்றும் அணையாமல் வைத்து மக்களின் காவலன் என காட்டிகொள்ளும் உத்திதான் பல விசயங்களுக்கு நல்ல தீர்வு இல்லாமல் இருந்து வருவது.

வெள்ளைகாரனுக்கு இந்த அவசியம் இல்லை. அவன் இருக்கும் வரை பதவி நிரந்தரம். எனவே அனைத்தையும் ஆராய்ந்து நல்ல பல விசயங்களையும் செய்ய முடிந்தது.

இன்னுமொரு விஷயம், நமது மக்களுக்கு சுதந்திரம், உரிமை என்று கிடைத்துவிட்டதால் இந்த நாடு எனக்கு  எல்லாம் செய்ய கடமைப்பட்டது என்ற எண்ணம் வந்து விட்டது. எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்ற மமதை.

சங்கம் ஒன்று இருக்கிறது. ஒரே மாதிரி தொழில் செய்பவர்கள் அல்லது ஒத்த கருத்து உள்ளவர்கள் ஒன்று கூடி ஒரு அமைப்பை ஏற்படுத்துவது வழக்கம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதால் ஒன்று கூடி செயல்படும் பொழுது நமது தொழிலுக்கோ அல்லது வாழ்க்கைக்கோ பல நல்ல விசயங்களை செய்ய முடியும். இதில் சேர்ந்த சிலர் நாம் நமது பங்கிற்கு என்ன செய்தோம்? ஆக்க பூர்வ நடவடிக்கையில் பங்கு கொண்டோமா? அல்லது நல்ல யோசனைகள் சொன்னோமா? என்றில்லாமல் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து இதை ஏன் என்னைக் கேட்டு செய்யவில்லை? எனக்கு ஏன் அழைப்பில்லை? என் உரிமை என்ன ஆனது? என வீண் விதண்டா வாதங்களிலும் குழப்படி வேலைகளிலும் இருப்பர். இதுதான் நாட்டின் உயர் மட்டம் வரை உள்ளது.

எனவே பணம், சுதந்திரம் இரண்டிலும் ஒரு தெளிவு வேண்டும். கத்தி படத்தில் கம்யூனிசம் என்பதற்கு ஒரு வசனம் வரும்.  உன் பசி தீர்ந்தபிறகும் நீ சாப்பிடும் இட்லி அடுத்தவனுக்கு சொந்தமானது என்று.  இந்த அளவிற்கு இல்லையென்றாலும், பேராசை இல்லாமல் குறைந்த பட்சம் அடுத்தவரை ஏமாற்றாமல் சம்பாதித்தல் நலம்.

எல்லோருக்கும் சுதந்திரமும் உரிமையும் வேண்டும் என்பதுதான் நியாயமான கருத்து. ஆனால் சிலரின் நடவடிக்கையை பார்க்கும் பொழுது அப்படி தேவையில்லையோ எனத் தோன்றுகிறது. வெள்ளைக்காரன் அடக்கி ஆண்டதால் தான் இந்த அணைகளை கட்ட முடிந்ததோ? உரிமையை ஆக்க பூர்வமாக பயன்படுத்தி கொள்ள நமது தகுதிகளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

எல்லாரையும் நாம் இங்கு குறிப்பிடவில்லை. பொது நலம் கருதி பாடுபட்ட மக்கள் இந்தியாவில் நிறைய பேர் இருந்தனர். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மக்களும் பொது நலத்திற்கென பாடுபட வேண்டும் என்ற அவசியமில்லை. நியாயத்திற்கு ஆதரவாக இருங்கள். அதுவே போதும்.

மேலே சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனது பார்வையில் எழுதப்பட்டவை. தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி.

-  கோ. பெருமாள்












Tuesday, October 21, 2014

நியாயமில்லாத தமிழ் பட எதிர்ப்பு.

கடந்த ஓரிரு ஆண்டுகளாக சில தமிழ் திரைப்படங்கள் வெளியிட எதிர்ப்புகள் வருவது வாடிக்கையாகி விட்டது. விஸ்வரூபம், துப்பாக்கி, தலைவா வரிசையில் இப்போது கத்தி என்ற படம் வருவதில் சிக்கலாகிவுள்ளது. ஏன் இப்படி?
நமது நாட்டில் ஒரு படம் வெளிவர வேண்டுமென்றால் அது மத்திய அரசின் தணிக்கை துறை குழுவினரால் பார்க்கப்பட்டு தேவைப்படின் சில நீக்கங்கள் / திருத்தங்கள்  செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கபடுகிறது. இதன் அடிப்படையில் பொதுமக்கள் பார்க்க திரை அரங்குகளில் வெளியிடப்படுகிறது. அந்த படத்தில் ஏதேனும் தவறான கருத்தோ காட்சியோ இருந்தால் தணிக்கை துறையிடம் அல்லது நீதி மன்றத்தில் முறையிடலாம். இல்லையெனில் அப்போது போராட்டம் கூட செய்யலாம்.  ஆனால் ஒரு படம் வெளியாகும் முன்னரே அதை தடுப்பது எந்த விதத்தில் நியாயம்? சினிமா எடுக்க வந்து கோடிக்கணக்கில் செலவு செய்து படம் விலையாகாமல் வெளியிட முடியாமல் நஷ்டப்பட்டு நலிந்தவர்கள் ஏராளம். உங்கள் எதிர்ப்பை நியாயமாக முறையிடாமல் தியேட்டரை முடக்குவேன், அங்கு பிரச்சனையை ஏற்படுத்துவேன் என்று சொல்வது அராஜகம் அல்லவா?  அதற்கு காவல் துறையும் பேசாமல் ஒதுங்கி கொள்வது முறையாகுமா? இதே எதிர்ப்பை ஆளும் கட்சியோ அல்லது எதிர் கட்சியோ ஒரு அரசியல் கட்சியில் அங்கமாகி உள்ளவர்களின் படத்திற்கு தெரிவிக்க முடியுமா?
கத்தி படத்தை லைகா என்ற நிறுவனம் தயாரிப்பதாகவும் அது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தொடர்பானது எனவும் சொல்லி எதிர்ப்பு..  இப்போது அந்த லைகா என்ற பெயர், தலைப்பில் போஸ்டரில் இடம் பெறக் கூடாது என்று சொல்கிறார்களாம். விநோதமாக உள்ளதல்லவா? படத்தில் முதலீடு செய்து விட்டார்கள். படத்தில் லாபமோ நட்டமோ அதுவும் அவர்களை சேரப் போகிறது. இப்போது பெயர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இதே நிறுவனம் இதற்கு முன்னரும் தமிழ் திரைப்படங்கள் தயாரித்து உள்ளதாம். அப்போது இவர்கள் எங்கே சென்றார்கள்?
ஒரு அந்நிய நாட்டு நிறுவனம் நமது நாட்டில் ஏதேனும் துறையில் வணிகம் செய்ய விரும்பினால் அதனை அனுமதிப்பதும் விதி முறைகள் வகுப்பதும் மத்திய அரசுதான்.   ராஜபக்சே மீது வெறுப்பு எனில் இவர்கள்  மத்திய அரசிடம்தான்  முறையிட வேண்டும்.  தமிழர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் எனவே அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும், மீறினால் போராட்டம் செய்வோம் எனவும் சொல்ல வேண்டும். மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனம் இலங்கையில் கம்பெனி ஆரம்பித்து தொழில் செய்து வருகிறது. ஏர்டெல் மற்றும் இன்னும் சில இந்திய நிறுவனங்கள் அங்கு தொழில் செய்து வருகின்றன. இலங்கையில் சிங்கள மக்களுக்கு நீங்கள் பெட்ரோல் கொடுப்பதால் இங்கு உங்களிடம் பெட்ரோல் வாங்க மாட்டோம் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் போராட்டம் செய்ய வேண்டியதுதானே?. முடியாது. ஏனெனில், காவல் துறையின் நடவடிக்கை அங்கு பாயும்.
உண்மையான எதிர்ப்பு எனில் முறைப்படி செய்து ராஜபக்சே நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய தடையை பெறுங்கள்.  உங்களை விட எளியோரிடம் உங்கள் வலிமையை காட்டுவது வீரம் அல்ல. சிந்தியுங்கள்.

ஜனநாயக நாட்டில் ஒரு படத்தை முறைப்படி வெளியிட இவ்வளவு சிரமமா? திரைத்துறையிலிருந்து வந்த அம்மாவின் ஆட்சியிலும் இது முறையாகுமா? 

Sunday, May 25, 2014

புதிய இடுகை

நோட்டா  - பலன் உண்டா?

தேர்தலில் போட்டியிடும்  எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லையெனில்  இதை பதிவு செய்வதற்காக NOTA (None Of The Above)  என்னும் வசதி வாக்கு பதிவு எந்திரத்தில் இந்த தேர்தலில் செய்யப்பட்டு இருந்தது. உங்கள் வாக்கை வேறு யாரேனும் போட்டு விடாமல் நீங்களே பதிவு செய்தீர்கள் என்ற ஒரு பலனைத் தவிர வேறு எந்த பயனும் இதில் இல்லை. ஒரு தொகுதியில் 100 ஓட்டுகள் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அதில் 80 ஓட்டுகள் பதிவாகி அதில் 60 ஓட்டுக்கள் NOTA விற்கும் 1௦ ஓட்டுக்கள் ஒருவருக்கும் 5, 3, 2 என்ற வகையில் ஓட்டுக்கள் மற்ற சிலருக்கும் கிடைத்தது என்றால் 1௦ ஒட்டு வாங்கியவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அவர்தான் NOTA போட்டவர்களுக்கு சேர்த்து அந்தப் பகுதியின் அரசாங்க பிரதிநிதி. (எம்.பி, எம். எல். ஏ. அல்லது கவுன்சிலர் இப்படி). NOTA வினால்  வந்த பலன் என்ன? ஒன்றும் இல்லை.  பதிவான வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் NOTA பெற்று இருந்தால் அந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று விதி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அப்படியில்லையே.

மேலும், ஒருவர் தான் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப வாங்க வேண்டுமென்றால் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கினைப் பெற்று இருக்க வேண்டும். இப்போது அதற்கான கணக்கில்,  பதிவான வாக்குகளில் NOTA வின் வாக்குகளை கழித்து மீதி உள்ளதில் ஆறில் ஒரு பங்கு வாங்கினால் டெபாசிட் கிடைக்கும் என உள்ளது. NOTA விற்கு போடும் ஓட்டு ஏறக்குறைய செல்லாத ஓட்டு என்ற கணக்கில் வருகிறது. தேவையா இது?

அர்விந்த் கேஜ்ர்வாலின் நாடகங்கள்

அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் இருந்த அர்விந்த் கேஜ்ர்வால் தனியாக வந்து கட்சி ஆரம்பித்து டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை இல்லாதபோதும் காங்கிரசின் ஆதரவோடு ஆட்சி அமைத்தார். டெல்லியில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறி 49 நாட்களிலேயே பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இப்போது ராஜினாமா செய்தது தப்புதான், மக்கள் மன்னிக்க வேண்டும் என்று கூறி மறுபடியும் ஆட்சி அமைக்க போவதாக கூறினார். காங்கிரஸ் ஒத்துழைக்காது என்று தெரிந்தவுடன் மறுநாள், இல்லையில்லை, தேர்தலை சந்திப்போம் என்று கூறுகிறார். தெளிவான முடிவெடுக்காமல் எத்தனை தடவைதான் மாற்றி மாற்றி பேசுவது?

பா.ஜ.க வின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி ஊழல் செய்தார் என இவர் சொல்ல கட்காரி  வழக்கு போட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜரானார் அர்விந்த். நீதிபதி, இவரிடம்  ஜாமீனில் செல்ல ரூபாய் 10000க்கான பிணை பத்திரம் தாக்கல் செய்ய சொன்னார்.  அர்விந்த், அப்படி எந்த பத்திரமும் தாக்கல் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். இது ஒரு சட்ட நடைமுறை, பத்திரம் தாக்கல் செய்தால்தான் ஜாமீனில் விடமுடியும் என்று கூறியும் கேஜ்ர்வால் மறுத்து விட  நீதிபதி இவரை சிறையில் அடைத்துவிட்டார். ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

நாட்டில் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என பல நடைமுறைகள் இருந்து வருகின்றன. உலகின் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா இன்னும் ஜனநாயக முறையில் கட்டுக்கோப்பாக இருந்து வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் மக்களும் அரசியல் கட்சிகளும் இந்த சட்டங்களை மதித்து நீதி துறையின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடந்து வருவதால் தான். அர்விந்த் ஒன்றும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல. சட்ட நடைமுறைகளின்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதுதான் முறை.


இவர் தன்னை வித்தியாசமாக காட்டிக்கொள்ள இப்படி நடந்து கொள்வது வெறும் நாடகமாக தெரிகிறது. 

Thursday, March 6, 2014

சஹாரா கம்பெனி செய்ததுதான் என்ன ?


கடந்த சில நாட்களாக சஹாரா கம்பெனியின் தலைவர் சுப்ரதா ராய் கைது பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

உச்ச நீதிமன்றம் இவரை கைது செய்ய ஆணையிட்டு உத்தரபிரதேச அரசின் போலிசாரால் கைது செய்யப்பட்டு வனத் துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்படுகிறார். 04.03.14அன்று  உச்சநீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது இவர் முகத்தில் கறுப்பு மை வீசப்பட்டுள்ளது. நீதிபதிகள் இவரை கண்டித்து  பேசி இவருடன் மற்ற இரண்டு இயக்குனர்களையும் 11ம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் மும்பையில் திரைப்பட உலகை சார்ந்த சிலர், பத்திரிகையாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் இவரைப் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்கள். நல்லவர், தர்மவான், கலையின் மீது ஆர்வம் கொண்டு உதவுபவர் என்று சொல்லியுள்ளார்கள்.  நிருபர்கள் சஹாரா நிறுவனம் பணம் திரட்டிய விதங்களைப் பற்றி கேட்டபொழுது பதில் சொல்ல முடியாமல் கூட்டத்தை  பாதியில் முடித்து விட்டார்கள்.

அப்படி என்னதான் பிரச்னை?  பார்ப்போம்.

கடன் பத்திரங்கள் மூலமாக பொது மக்களிடமிருந்து சுமார் 20000 கோடி ரூபாயை சஹாரா குழுமத்தின் இரு நிறுவனங்கள் திரட்டியதாகவும் அதனை விசாரிக்கவேண்டும் என்றும் செபி (SEBI – Securities and Exchange  Board of India)  அமைப்பிற்கு  புகார்கள் வந்தன. இந்த சமயத்தில் சஹாரா குழுமம் அதன் இன்னொரு நிறுவனத்தின் பேரில் பங்குகள் வெளியிட அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்து இருந்தது. இதில் செபிக்கு சில தகவல்கள் கிடைக்க இதன் அடிப்படையிலும்  செபி விசாரித்தது.

ஒரு நிறுவனம் 50 பேர்களுக்கும் அதிகமான பேரிடமிருந்து  கடன் பத்திரம் மூலம் நிதி திரட்டுவதாக இருந்தால் செபியிடம் அனுமதி வாங்கவேண்டுமாம். சஹாரா வாங்கவில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த பணியை முடித்து விட வேண்டும். இவர்கள் மாதக் கணக்கில் செய்துள்ளார்கள். சரி, இப்படி முறைப்படி செய்யாததால், வாங்கிய பணத்தை 15% வட்டியுடன் சேர்த்து சுமார் 24000 கோடியையும் பொது மக்களிடம் திருப்பிக் கொடுத்து விடுமாறு செபி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சஹாரா மேல் முறையீடு செய்தது. SAT (Securities Appellate Tribunal), அலஹாபாத் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இப்படி பல தடவை மனுக்கள், முறையீடுகள், விவாதங்கள் என செபிக்கு இந்த விசயத்தில் அதிகாரம் உள்ளதா என்பதிலிருந்து கம்பெனி சட்டங்கள், கடன் பத்திரம் சம்பந்தமான சட்டங்கள் என 2010லிருந்து இரண்டு வருடங்களுக்கு இந்த அமைப்புகளில் மாறி மாறி விசாரணை நடந்தது. கடைசியில்  2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் 24000 கோடி பணத்தை  கொடுத்தவர்கள் விவரத்துடன் செபியிடம் ஒப்படைக்கச் சொல்லி  சஹாராவிற்கு  ஆணையிட்டது. 

நீதிமன்றம் சொன்ன கெடுவுக்குள் சஹாரா பணம் கொடுக்கவில்லை. மேலும் கால அவகாசம் கேட்டது. உச்ச நீதிமன்றம் டிசம்பர் 2012ல் தற்போது ரூபாய் 5120 கோடியும், மீதிப் பணத்தை இரண்டு தவணைகளாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தருமாறு உத்தரவிட்டது.  ரூபாய் 5120 கோடியை கொடுத்த சஹாரா மீதிப் பணத்தை கொடுக்கவில்லை.

இதற்கிடையில் சஹாரா சுமார் 127 லாரிகளில் சுமார்  30000 பெட்டிகளில் பணம் கொடுத்த 3 கோடி பேர்களின்  விவரங்கள் என லக்னோவிலிருந்து மும்பை செபி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தது. அதில் தோராயமாக 20000 பேர்களை எடுத்து அவர்களின் முகவரிக்கு பணம் பெற்றுக் கொள்ளும்படி தகவல் அனுப்பியது செபி.  ஆனால் அதில் 68 பேர் மட்டுமே பதில் அனுப்பினர்.   நிறைய முகவரிகள் / ஆட்கள் இல்லை. நிறைய முரண்பாடுகள் அதில் உள்ளதை செபி கண்டுபிடித்தது.  உதாரணமாக, கலாவதி என்ற பெயர் சுமார் 6000தடவை வருகிறதாம். 

செபி, சஹாராவின் வங்கி கணக்குகளை முடக்கி வைத்தது. அதன் சொத்துக்களை விற்பதற்கு தடை விதித்தது. பணம் கொடுக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது செபி.  20000 கோடி மதிப்பிற்கு வில்லங்கம் இல்லாத சொத்துக்களை செபியிடம் ஒப்படைக்குமாறு சஹாராவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பையில் உள்ள இரண்டு சொத்துக்களின் பத்திரங்களை சஹாரா கொடுத்தது. ஒன்றின் மதிப்பு 19000 கோடி என்றும் இன்னொன்று  1000 கோடி என்றும் சொன்னது.  ஆனால் 19000 கோடி என்று சொன்ன சொத்தின் உண்மை மதிப்பு 118 கோடிதான் என்று செபி கண்டறிந்தது. இதனை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது செபி. 

நீதிமன்றத்தின் உத்திரவுகளை சஹாரா உண்மையுடன் நிறைவேற்றவில்லை என்றும் முன்னுக்கு பின் முரணாக நடப்பதாகவும் கூறி சுப்ரதா ராய் மற்றும் மூன்று இயக்குனர்களும் வெளிநாடு செல்ல தடை விதித்தது உச்ச நீதிமன்றம். வேறு சொத்துக்களை கொடுப்பதாக கூறியது சஹாரா.

ஆனால் கொடுத்த சொத்து பத்திரங்கள் முழுமையாக இல்லை. சொத்தின் தொடர்ச்சியான பத்திரங்கள் மற்றும் மூல பத்திரங்கள் வழங்கப்படவில்லை. இவற்றை விற்பது இயலாத காரியம் என்றது செபி.

கடந்த பிப்ரவரி 21ம் தேதி சஹாராவின் வழக்கறிஞர்களே இந்த பத்திரங்கள் மூலம் சொத்துக்களை விற்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டார்கள். நீதிபதிகள், சஹாராவின்  சுப்ரதா ராய் மற்றும் இயக்குனர்களை ஆஜர் ஆக சொல்லி உத்தரவிட்டார்கள்.  அவர்கள் ஆஜராகவில்லை. பின்பு கைது செய்து ஆஜர் செய்யுமாறு போலிசுக்கு ஆணையிட்டனர்.

அவரது அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை, உடன் இருக்க வேண்டும் என்று ஆஜராவதில் விலக்கு அளிக்குமாறு கேட்டதை நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது பத்திரிகைகளில் அரை மற்றும் முழு பக்க விளம்பரங்களை சஹாரா தனது நிலையை விளக்கி வெளியிட்டு வருகிறது. இப்போதும்  சுப்ரதா ராயின் அம்மாவின் உடல் நிலை குறித்து மருத்துவர் வழங்கிய சான்றிதழின் நகலோடு பத்திர்கையில் விளம்பரம் வந்தது. நேர்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் மிகப் பெரிய வழக்கறிஞர்களான பாலி. எஸ். நரிமன்,  ராம் ஜெத்மலானி, ஆகியோரைக் கொண்டு வழக்கு நடத்தும் பொழுது நீதிமன்றத்திலேயே இந்த விவரங்களை சொல்லலாமே. எதற்கு இந்த வீண் விளம்பரம்?  இடையில் ஒரு முறை சுப்ரதா ராய்,   தொலைகாட்சியில் இந்த விவகாரம் குறித்து நேரடியாக விவாதம் நடத்த வருமாறு செபியை அழைத்தார்.  

இப்போது 11ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ள நீதிமன்றம் இதில் ஒரு இயக்குனர் பெண் என்பதால் அவருக்கு சிறை செல்வதில் இருந்து விலக்கு அளித்து அவர் மற்ற ஏற்பாடுகளை செய்து கலந்து பேசி இந்த பணத்தை கொடுப்பதற்க்கான சரியான வழிமுறைகளுடன்  வருமாறு அறிவுறுத்தி உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியமான ஒரு அமைப்பான பங்குசந்தையின் நம்பகத் தன்மையை காப்பாற்ற வேண்டும். மேலாக நீதிமன்றத்தின் மேல் மக்களின் நம்பிக்கையை உறுதிபடுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. அதற்கு இப்படியான நடவடிக்கைகள் தேவை எனவும் கூறுகிறது.

சரி, இந்த பணம் உண்மையாக எங்கிருந்து வந்தது?.  சட்ட ரீதியாக ஒரு தப்பை கண்டு பிடித்து அதனை சரி செய்ய வேண்டுமென்றால் எத்தனை இடையூறுகள்? பணமும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கு வேறு நியதிகளா?

முகநூலில் (Facebook) நண்பர் ஒருவர் எழுதியது :  50 ரூபாய் பிக் பாக்கெட் செய்யும் ஒருவரை கை விலங்கிட்டு சட்டையை கழற்றி ஜட்டியுடன் லாக் அப்பில் வைக்கும் போலிஸ்,   20000 கோடி ஏமாற்றுபவரை கைது செய்து அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கிறது. சரியா இது?

எல்லா பெருஞ் செல்வங்களுக்கும் பின்னாலும் குற்றம் இருக்கிறது என்று பிரெஞ்ச் நாவலாசிரியர் ஒருவர் எழுதியுள்ளாராம். 

இந்த விசயத்தில் செபி அமைப்பையும் உச்ச நீதிமன்றத்தையும் நாம் வெகுவாக பாராட்ட வேண்டும். சுமார் நான்கு வருடங்களாக இந்த வழக்கை எந்த வித நெருக்கடிகள், அச்சுறுத்தல்களுக்கு (வந்து இருக்கலாம்) வளைந்து விடாமல்  நடத்தி வரும் செபி அமைப்பை பாராட்டுவோம். செபியின் மூத்த வழக்கறிஞர் சென்னையை சேர்ந்த திரு.அரவிந்த் தத்தார் அவர்களும் பாராட்டுக்குரியவர். 

சுருக்கமாக எழுதியதுதான் இது. விரிவாக எழுதினால் பல பக்கங்களுக்கு எழுத வேண்டி இருக்கும்.  


இக்கட்டுரை எழுத உதவிய தி இந்து, Business-Standard, Business line, Times of India, Economic Times, NDTV இணைய தளங்களுக்கு நன்றிகள்.   










Saturday, February 22, 2014

ராஜீவ் காந்தி கொலையும் கைதிகள் விடுதலையும்

இப்போது மக்களிடையே விவாதத்தில் உள்ள முக்கியமான ஒரு விசயம். என்னுடைய கருத்து இவர்களை விடுதலை செய்யலாம் என்பதே. காரணங்களை விவரித்துள்ளேன்.  வாசித்து பார்க்கவும்.

1.       ராஜீவ் காந்தியின் கொலை இந்தியாவிற்கு எதிரான ஒரு தீவிரவாத செயல் என கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் 08.10.1999 அன்று தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.  ஒருவர் (ராஜீவ் காந்தி) எடுத்துள்ள முடிவினால் பாதிக்கப்பட்ட இன்னொருவர்  (பிரபாகரன்) செய்த செயல். இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவோ இந்திய மக்களுக்கு எதிராகவோ விடுதலை புலிகள்  போரிடவில்லை. ராஜீவ் காந்தியை தவிர மற்ற இந்தியர் யாரையும் கொல்லும் நோக்கம் அவர்களுக்கு இருந்ததாக நிருபீக்க ஆதாரங்கள் இல்லை. எனவே இந்தக் குற்றம் தடா சட்டத்தின் கீழ் வராது என உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. எனவே வட இந்திய தொலைக்காட்சிகள் கூச்சலிடுவது போல் இதை ஒரு பயங்கரவாத செயல், தீவிரவாதிகள் என்றெல்லாம்  எடுத்துக் கொள்வது தவறு.

2.       இந்தக் கொலையில் நேரடியாக சம்பந்தபட்டதாக கூறப்படும் பிரபாகரன், பொட்டு அம்மன், சிவராசன், தனு போன்றவர்கள் இப்போது உயிருடன் இல்லை. இந்த கைதிகள் துணையாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.  அதுவம் பேரறிவாளன் குற்றம் என்னவென்றால், பேட்டரி செல் வாங்கி கொடுத்ததாம். இந்த செல் இதற்குதான் வாங்கினாரா? போன்ற பல வினாக்களுக்கு பதில் இல்லை. இதற்காக 20  வயதில் சிறைக்கு சென்றவர்க்கு இன்று வயது 43 ஆகிறது.


3.       மிகக் கொடுமையான தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடை பெற்றது. வெளி உலகிற்கு தெரியாமல், மூடிய அறைக்குள் நடந்த இந்த விசாரணையில் நியாயமான உரிமைகளுக்கு இடம் இல்லை. நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் 60 நாட்கள் வரை சிறையில் வைக்கலாம். போலிஸ் விசாரணையில் வாங்கப்பட்ட வாக்குமூலத்தை கோர்ட் ஏற்றுக் கொள்ளும். யார் யார் சாட்சிகள், அவர்களின் சாட்சியங்கள் என்ன? என்பதெல்லாம் வெளியில் தெரியாது. அப்பொழுது கைது செய்யப்பட்ட ஆதிரை என்பவருக்கு வயது 17தான். பெரிய சட்ட வல்லுனர்களே அதிர்ச்சி அடையும் வண்ணம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை அளித்தது தடா நீதிமன்றம். இது நியாயமாக நடந்த விசாரணை அல்ல என பல மனித உரிமை அமைப்புகள் கூறின.  நல்லவேளை இப்போது தடா என்னும் சட்டம் இல்லை.

4.       ராஜீவ் காந்தி கொலை மற்றும் அதன் பின்னணிகளை பற்றி விசாரிக்க நீதிபதிகள் வர்மா கமிசனும் மற்றும் ஜெயின் கமிசனும் அமைக்கப்பட்டன. இவர்கள் பல விவரங்களை கண்டுபிடித்துக் கூறினார்கள். ராஜிவ் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடுகள் இல்லை. ஆனால் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் அதில் மாற்றங்களை செய்து தொந்தரவு செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியின் பயண விவரம் சிவராசனுக்கு தெரிந்தது எப்படி என்பதற்கு இன்று வரை பதில் இல்லை. சந்திராசாமி என்பவரைப் பற்றியும் குற்றம் சொல்லப்பட்டது. நீதிபதிகள் கொடுத்த அறிக்கைகளின்படி எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சி.பி.ஐயில் பணி புரிந்த ரகோத்தமன் என்பவர் இந்த கொலையில் இன்னும் சிலர் சம்பந்தபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

5.       இவர்கள் இந்த கொலையின் மூலம் நேரடியாக எந்த பலனையும் பெற்றதாக தெரியவில்லை. ஆதாயதிற்க்கான கொலை என்று சொல்ல முடியாது. கொலைக்கான திட்டங்கள் 1987லிருந்து
தொடங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிகிறது. இதற்கு மூலமாக இருந்தவர்கள், உதவியவர்கள் என பலர் இன்னும் வெளியில் தெரியவில்லை அல்லது மறைக்கபடுகிறார்கள்.

சி.பி.ஐ. விசாரணை, வர்மா மற்றும் ஜெயின் கமிசனின் அறிக்கைகள், தடா கோர்ட்டின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் போன்ற அனைத்தையும் பார்க்கும்பொழுது 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ள இவர்களை விடுதலை செய்யலாம் எனத் தோன்றுகிறது.  பிரதமரை கொன்றவர்களுக்கே விடுதலையா என உணர்ச்சி வசப்பட்டு பேசாமல் இதில் உள்ள அனைத்து உண்மைகளையும் இவர்களது பங்கினையும் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நீதி தேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டு இருக்கும். ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒரு வழக்கில் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல், வேண்டியவர் வேண்டாதவர் என பாராமல் வழக்கின் உண்மை தன்மையைக் கொண்டு விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அதைத்தான் உச்ச நீதிமன்றமும் இப்போது செய்துள்ளது.


மாற்று கருத்துக்கள் இருப்பின் வரவேற்கப்படுகிறது.

Wednesday, February 12, 2014

லோக்சபாவும் ராஜ்யசபாவும்


கடந்த 27.08.2010 அன்று நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சம்பளத்தை ரூபாய்16000 லிருந்து   50000 ஆகவும், தொகுதி பணிக்கென 20000லிருந்து  45000 எனவும்,  அலுவலக செலவுக்கென 20000 லிருந்து 45000 எனவும் ஆக மொத்தம் மாத சம்பளத்தை ரூ. 56000 லிருந்து ரூ.140000 ஆக உயர்த்திக் கொண்டார்கள். மற்ற சலுகைகளும் ஏராளம்.  இலவச தொலைபேசிகள், மின்சாரம், தண்ணீர், குடியிருக்க  பங்களா, இலவச விமான மற்றும் ரயில் பயணங்கள் (மனைவிக்கும் சேர்த்து),  வாகனம் வாங்க வட்டியில்லா கடன் இன்னும் பிற.

இதைத் தவிர பார்லிமென்ட் கூட்டம் நடைபெறும் பொழுது அதில் கலந்து கொள்ள தினசரி ரூ.1000 என இருந்ததை ரூ. 2000 என உயர்த்திக் கொண்டார்கள். இதற்கு உள்ளே சென்று அவையில் பேச வேண்டும் என்றில்லை.  வெளியில் உள்ள ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்டாலே போதும்.  சம்பளம், படிகள் மற்ற சலுகைகள் எல்லாம் சேர்த்து ஒரு எம்.பி பெறும் வருட ஊதியம் சுமார் 40லட்சங்களைத் தாண்டும். இதற்கு எந்த பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படிக்க வேண்டும் என்ற அவசியமேயில்லை. 5 வருட காலத்திற்கும் இந்த 534 எம்.பி.களுக்கும் ஆகும் மொத்த செலவு ஆயிரம் கோடிகளுக்கும் அதிகம் ஆகும். 

இப்படி இவர்கள் சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்திக் கொண்ட சமயத்தில்தான் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஊழல் என்று செய்தி வந்தது. டீசல், பெட்ரோல் விலைகள் உயர்த்தப்பட்டன. சிலர், இந்த நேரத்தில் இந்த சம்பள உயர்வைப் பற்றி பேச வேண்டாம் என சொல்லியதாகவும் தகவல் உண்டு.. அதே சமயத்தில் லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த உயர்வு போதாது, 16000லிருந்து  50000அல்ல, 80001ஆக உயர்த்த வேண்டும் என்று பேசியதாக  செய்திகள் சொல்கின்றன. (80000 என்பது  IAS முடித்த ஒரு மத்திய அரசு செயலாளர் வாங்கும் மாத ஊதியம், அதை விட ஒரு ரூபாய் தாங்கள் அதிகம் வாங்க வேண்டும் என்பது இவர்களின் ஆசை)

சரி, இவ்வளவும் எதற்காக?  நமது இந்திய மக்களின் வாழ்வை மேம்படுத்த, இந்திய நாட்டை வளமாக்க நல்ல பல திட்டங்களும் சட்டங்களும் கொண்டு வந்து அதனை ஆரோக்கியமான முறையில் விவாதித்து திருத்தங்கள் தேவைப்படின் அவற்றை செய்து செம்மையான ஒரு ஆட்சி முறை நடக்க இவர்கள் உழைப்பார்கள் என்பதற்குதான், சுமாராக பத்து லட்சம் மக்களுக்கு ஒருவர்  என்ற வகையில் இவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்துள்ளோம்.

1952ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நடைபெற்ற பார்லிமென்ட் கூட்டங்களில் இப்போதைய லோக்சபா மற்றும் ராஜ்யசபா போல் மோசமாக எப்போதும் இருந்ததில்லை என சொல்லப்படுகிறது. எந்தவொரு பிரச்சனைக்கும் கூடி கலந்து பேசி, விவாதித்து முடிவு காண்போம் என்றில்லாமல் கூச்சலிடுவதும் பேப்பர்களை கிழிப்பதும் மற்றவரை பேச விடாமல் தடுத்து அவையை முடக்குவதும் எந்த விதத்தில் நியாயம்?
ஒரு விசயத்தின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்காமல், நடு அவைக்கு வந்து வெறும் கூச்சலிடுவதால் எந்த தீர்வும் கிடைக்காது.  மற்றும்  இவர்களை நல்லவர்கள், அறிவாளிகள் என நம்பி அனுப்பி வைத்த மக்களை கேவலப்படுத்துவதாகவும்  உள்ளது.

இதற்கு என்னதான் தீர்வு?

  1. நாட்டில் எல்லா அரசு வேலைகளுக்கும் ஊதியத்தை நிர்ணயம் செய்ய ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஊழியர், ஆசிரியர், வங்கி பணியாளர் போன்றவர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்வதுபோல் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் சம்பளம் நிர்ணயித்தல் வேண்டும். தங்களுக்கு தாங்களே ஊதியத்தை நிர்ணயிப்பது நியாயம் அல்ல.
  2. மீண்டும் மீண்டும் தேவையில்லாத குழப்பம் விளைவிக்கும் எம்.பி.க்களை தகுந்த விசாரணை செய்து அதன் அடிப்படையில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பதவி நீக்கம் செய்யலாம்.
கருத்துக்களை மறுமொழியில் தெரியப்படுத்தவும்.