உலகின் சில நாடுகள் ஆங்கிலேயர்களால்
அடிமைபடுத்தப்பட்டு ஆட்சிச் செய்யப்பட்டது.
பின்பு ஒவ்வொன்றாக சுதந்திரம் பெற்றன. இந்த நாடுகள் அனைத்தும் காமன்வெல்த்
என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அடிமைப்படுத்தியதை ஞாபகப்படுத்தும் இந்த அமைப்பு தேவையா? இந்த
அமைப்பின் நிரந்தர தலைவர் இங்கிலாந்தின் ராணி எலிசபெத் அவர்கள்தான். அடிமையான
நாடுகளைக் கொண்டு ஒரு சங்கம் அதற்கும் அவர்தான் தலைவர். என்ன விந்தை?
இதன் மொத்த உறுப்பினர் நாடுகள் 53. அதில் 32 நாடுகள் 15 லட்சத்திற்கும்
குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய தேசங்கள். (நமது சென்னை மாநகர மக்கள் தொகை 89 லட்சங்கள்). மேலும்
இதில் 5 நாடுகள் பெரியதாக இருந்த போதிலும்
சரியான வளர்ச்சி அடையாததால் சிறிய நாடுகளின் தொகுப்பில் வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க நாடுகள் என்று
பார்த்தால் கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மட்டும்தான். இதிலும் கனடா நாட்டு
பிரதமர் இலங்கையில் நடைபெறும் கூட்டத்தை புறக்கணித்து விட்டார். ஆசிய மற்றும்
ஐரோப்பா கண்டங்களில் உள்ள முக்கிய
நாடுகளான ரஷ்யா, சீனா, ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்றவை இந்த அமைப்பில்
அங்கம் வகிக்கவில்லை.
இப்போது இலங்கையில் நடப்பது போல் கடந்த 93ஆம் வருடத்திலிருந்து
கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதில்
சுமார் 5 கூட்டங்களில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளவில்லை. இந்தியாவின் சார்பாக
அமைச்சர் ஒருவர்தான் கலந்துகொண்டு இருக்கிறார்.
உப்பு பெறாத விசயத்தை நமது அரசியல்வாதிகள் ஊதி
பெரிதாக்கி விட்டார்களோ எனத் தோன்றுகிறது.
இவ்வளவு சாதாரணமான தேவையில்லாத ஒரு அமைப்பின்
எந்தவொரு கூட்டத்திலும் இந்திய குடியரசு தலைவரோ அல்லது பிரதமரோ கலந்து
கொள்ளவேண்டிய அவசியமில்லை. சரி, ஒரு அமைப்பில் உறுப்பினர் ஆகிவிட்டோம்,
கூட்டத்தில் கலந்து கொள்வதுதான் முறை என்னும் பட்சத்தில் ஒரு துணை அமைச்சரையோ
அல்லது வெளியுறவுத் துறை செயலரையோ அனுப்பி வைக்கலாம். இது போதுமானது.
**********
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு நியாயமான விசாரணை
நடைபெறவில்லை, குற்றவாளிகளை தண்டிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ராஜபக்சே
முதல் குற்றவாளி என்பதாக கூறி இந்த காமன்வெல்த் கூட்டத்தை இந்திய அரசு புறக்கணிக்க
வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை.
இந்திய அரசு இலங்கையின் மீது நடவடிக்கை எடுக்க
தயங்குவதன் காரணம், அது பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் கூட்டு சேர்ந்து இந்தியப்
பெருங்கடலில் அவர்களின் ஆதிக்கத்திற்கு தளமாக மாறும், அதை தடுக்கவே இந்தியா இப்படி
செயல்படுவதாக சொல்கிறார்கள்.
அளவில், மக்கள் தொகையில் மற்ற எந்த
வகையில் பார்த்தாலும் ஒரு சிறிய
நாடான இலங்கை இந்தியாவை மறைமுகமாக மிரட்டும் தொனியில் நடந்து கொள்வதா? அதற்கு
பதில் வினை செய்வதற்கு இந்தியா தடுமாறுவதா? இந்த சமயத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய
விமானப்படையால் நடத்தப்பட்ட, யாழ்ப்பாணம் மீது உணவு பொருட்களை இறக்கிய “ஆபரேஷன்
பூமாலை” என்ற நிகழ்ச்சியை நினைவு
கொள்வோம். நம்மால் முடியும். தலைமையின் கையில்தான் உள்ளது எப்படி செய்வது என்பது.
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா நாட்டு
பிரதமர் எப்போதோ அறிவித்து விட்டார். இங்கிலாந்தை ஆதாரமாக கொண்டுதான் இந்த
அமைப்பே, எனவே அவர்கள் புறக்கணிக்க முடியாது. ஆனால் இங்கிலாந்து பிரதமர் தான்
கலந்து கொள்வதாகவும், அங்கு போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து
பேசுவதாகவும் லண்டனில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகளுக்கு மதிப்பளித்து பேட்டி
கொடுக்கிறார். ஆனால் இந்தியா முடிவெடுப்பதில் ஏன் இந்த குழப்பம்? தாமதம்?.
தமிழர்களுக்கு தகுந்த அதிகாரமும், வாழ்வுரிமையும் பெற்று
தருவதோடு இலங்கையை நமது நம்பிக்கைக்குரிய ஒரு நட்பு நாடாக மாற்றுவது இந்திய அரசின்
பொறுப்பு. இதற்காக எந்தவிதமான அணுகுமுறையை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். இந்தியாவில் பிறந்த அரசியல் மாமேதை
சாணக்கியரின் சாம, தான, பேத, தண்டம் முறைகளை கையாண்டு வெற்றி கொள்ள வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment