Tuesday, November 19, 2013

இலங்கை வடக்கு மாகாண முதல்வரின் பேட்டி

இலங்கை வடக்கு மாகாண முதல்வரான திரு. சி. வி. விக்னேஸ்வரன் தி  இந்து தமிழ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கை தமிழரைப் பற்றி நமது பெரும்பாலான அரசியல்வாதிகளும் மக்களும்  எண்ணிக் கொண்டிருப்பதற்கு மாறாக கருத்துகள் உள்ளன. 

தமிழீழம் குறித்து  :  ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பதே வடக்கு மாகாண முதல்வரின் நிலைப்பாடாக உள்ளது.  தமிழக அரசியல்வாதிகள் தமிழீழம் குறித்து பேசி வருவதைப் பற்றி கேட்டால்,  அவர்கள் உணர்வு பூர்வமாக பேசுகிறார்கள்.  நாங்கள் யதார்த்தத்தை உணர்ந்து அறிவு பூர்வமாக, நிதானமாக யோசிக்கிறோம்.  இது உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டம் என்கிறார்.

தமிழக மீனவர்கள் கைது பற்றி :  தமிழக மீனவர்கள் இழுவலை படகுகள் மூலம் இந்திய பிராந்தியத்தில் மீன்களை வாரி இழுத்து காலி செய்து விட்டார்கள். இழுவலை படகுகளால் மீன்கள் மட்டுமல்ல, பவளப் பாறைகளும் இழுக்கப்பட்டு அழிந்து வருகின்றன. இலங்கையில் இழுவலை படகு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக மீனவர்கள்  எங்கள் பகுதியில் நுழைந்து இரவு ஒரு மணியளவில் அதுவும் எங்கள் கண் பார்வைக்கு எட்டும் தூரத்திலேயே இலங்கையில் உள்ள கடல் வளங்களையும் அழிக்கும் வகையில் மீன் பிடிக்கிறார்கள். இன்று பயன் அடைந்து கொண்டிருப்பவர்கள் இந்த படகுகளுக்கு சொந்தக்காரர்களான பெரும் பணக்காரர்கள் தானேயொழிய சிறு மீனவர்கள் அல்ல என்றும் இழுவலை படகுகளை விட்டுவிட்டு மீண்டும் கரை வலையை உபயோகித்தால் கடல் வளம் பெருகும். கடல் அன்னை பூரிப்பாள், என்கிறார்.

தமிழர் சிங்களர் உறவு : தமிழரும் சிங்களரும் சேர்ந்து இணக்கமாக வாழ்வதற்க்கான வகை பற்றி அவரிடம் கேட்டபோது, சிங்களர்களே சிறுபான்மையினர் மனோநிலையில்தான் உள்ளனர். மற்றவரைக் காட்டிலும் நாம் தாழ்ந்துவிட்டோம் என்ற எண்ணத்தில் எங்களை துன்புறுத்துகின்றனர். இதற்க்கு காரணம் தமிழ்நாடுதான். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் பேச பேச இத்தனை கோடி மக்களின் ஆதரவு இலங்கை தமிழ் மக்களுக்கு இருக்கிறது எங்களுக்கு யாரும் இல்லை என்ற எண்ணம் மேலோங்க எங்களை துன்புறுத்தி இன்பம் காண்கிறார்கள் என்கிறார் விக்னேஸ்வரன் அவர்கள்.

முன்னாள் நீதிபதியான சி.வி. விக்னேஸ்வரன், ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்,  மக்கள் சேவை என்பது ஆன்மீகத்தின் ஒரு பகுதியெனவும் அரசியலுக்கு தானாக வரவில்லை, அரசியலுக்குள் தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட்டதுதான் அரசியலில் இவரது முதல் பணி.  இவரது பேட்டி முழுவதும் ஆங்கில சொற்றொடர் எதுவும் இல்லாமல் தூய தமிழில் அழகாக உள்ளது. மிகவும் மென்மையான சொற்களைக் கொண்டு தனது கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். போர்க்குற்றங்கள், விடுதலைப்புலிகள் பற்றி எதுவும் கூறவில்லை. தற்போதைய நிலை மற்றும் அதிகார பகிர்வு, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் குறித்து பேசியுள்ளார்.

வடக்கு மாகாண முதல்வர் என்னும் பொழுது இவரது கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. நாம், தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் இலங்கை குறித்த கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமோ எனத் தோன்றுகிறது.  அங்குள்ள தமிழர்களுக்கு அதிகாரமும் வளமான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டிய முயற்சிகளை முன்னெடுப்போம்.


மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் வரவேற்கிறேன். இந்த பிரச்னை குறித்த நமது எண்ணத்தை செம்மைப்படுத்த உதவட்டும்.  

No comments:

Post a Comment