Monday, October 7, 2013

தங்கமே தங்கம்


தங்கம், உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மதிப்பு வாய்ந்த ஒரு உலோகம்.  பாமரன் முதல் பணக்காரன் வரை அனைவரும் இருப்பு வைத்துக் கொள்ள விரும்பும் சிறந்ததொரு முதலீடு.   நினைத்தவுடன் பணமாக மாற்ற முடிகிற அருமையான சொத்து.

தங்கத்தை பெரும்பாலும் கடைகளில் நாம் வாங்குகிறோம்.  அப்படி வாங்கும்பொழுது ஏற்பட்ட சந்தேகங்களை பதிவு செய்யவே இந்த இடுகை.

1. சேதாரம் :  நகைகளை செய்யும்பொழுது தங்கம் சிறிதளவு வீணாவது உண்டு என்பதால் அதற்கென நகையின் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவு சேதாரம் என கணக்கிடப்பட்டு அதற்கும் சேர்த்துதான் நாம் பணம் கொடுக்க வேண்டும். இந்த சேதாரத்தின் அளவு நகையில் உள்ள வேலைப்பாடுகளை பொருத்து ஒவ்வொரு நகைக்கும் வேறுபடும். இது இயல்பானதே. ஆனால் கடைக்கு கடை இதன் அளவு மாறுவது ஏன்? இது குறித்து சமீப காலங்களில் சில கடைகள் போட்டி போட்டு கொண்டு எங்கள் கடையில் சேதாரம் குறைவு என விளம்பரம் செய்யவும் ஆரம்பித்துள்ளன.  அதுவும் சில கடைகளில்,  நகையை தெரிவு செய்து   விலையை கணக்கிட்ட  பிறகு அங்குள்ள பெரிய அதிகாரியிடம் சென்று காண்பித்து முறையிட்டால், அவர் சேதாரத்தில் சிறிது குறைத்து தருகிறார்.  ஏன் இப்படி? உண்மையான சேதாரம்தான் எவ்வளவு? ஒரு பவுன் (8 கிராம்) நகை வாங்கினோம் என்றால் இன்றைய மதிப்பின் படி ரூ.21976 செலுத்த வேண்டும். இதில் சேதாரம் 18% எனில், ரூ.3955 அதிகம் சேர்த்து ரூ.25931 கொடுக்க வேண்டும். தங்கம் விலை ஏறினால் எல்லா கடைகளும் விலையை ஏற்றி விடுகின்றன. எந்தவொரு கடையும், வேணாம். இந்த தடவை நாங்கள் விலையை ஏற்றவில்லை. பழைய விலைக்கே விற்கிறோம்என்று சொல்வதில்லை. இறங்கினாலும் அப்படியே.  இந்த சேதார விசயத்திலும் ஏன் ஒரு வரைமுறையை கடைபிடிக்கக் கூடாது?

2. செயற்கை கல்லின் விலை:  கல் வைத்த நகை வாங்கும்பொழுது நகையின் எடையில்  அதில் உள்ள கற்களின் எடையும் சேர்த்து கணக்கிடப்படுகிறது. இந்த கல்லிற்கும் தங்கத்தின் விலையை கொடுக்க வேண்டியுள்ளது. இந்த கற்கள் தங்கத்தின் மதிப்பு பெறுமா?. (ஆனால் நாம் பழைய கல் நகைகளை கடையில் கொடுக்கும்பொழுது அவர்கள் கற்களை நீக்கி விட்டுத்தான் மீதி உள்ள தங்கத்தை எடை போட்டு வாங்குகிறார்கள்.)

ஆனால் வைர நகைகள் வாங்கும்பொழுது வைரத்தை தங்கத்துடன் எடை போடுவது இல்லை. வைரத்திற்கென தனியாக மதிப்பிட்டு பணம் வாங்கப்படுகிறது. ஏன் இந்த முரண்பாடுகள்? இதை நெறிப்படுத்த முடியாதா?

3. தங்கத்தின் தரம்: சில கடைகளின் நகைகள் தரமாக இருக்கும் என்றும் சில கடைகளில் தரம் சுமார்தான் என்றும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் விலை ஒன்றுதான். இதே கடைகள் நம்மிடம் பழைய நகையை வாங்கும்போது தரத்தின் அளவை நிர்ணயித்து பின்புதான் தொகையை கணக்கிடுகிறார்கள். விற்கும்போழுதும் அப்படியே செய்தால் என்ன?. கணினிமயமாகி விட்ட இந்த காலத்தில் தங்கத்தின் தரத்தை நிர்ணயிப்பது கடினமாக இருக்க வாய்ப்பில்லை.

 இவற்றை ஒழுங்குபடுத்துவது யார் ? அரசுதான் என்பதில் அய்யமில்லை.
 
பங்கு வர்த்தகத்தை முறைபடுத்த SEBI உள்ளது.
காப்பீட்டு (Insurance) கழகங்களை முறைபடுத்த IRDA உள்ளது.
தொலை தொடர்பு கம்பெனிகளை முறைபடுத்த TRAI உள்ளது.
வங்கிகளை கண்காணிக்க RBI உள்ளது.

சமூகத்தின் அனைத்து மக்களும் சம்பந்தபட்ட,  தினமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த தங்க வர்த்தகத்தை நெறிபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசாங்க கோழி முட்டை அம்மியையும் உடைக்கும் என்பது பழமொழி. அரசால் முடியாதது எதுவும் இல்லை.

 
இவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறோம்.

மாற்று கருத்துக்கள் இருப்பின், வரவேற்கப்படுகிறது. 

No comments:

Post a Comment